நாளை முதல் அரசு சாதாரண கட்டணப் பேருந்துகளில் மகளிர் அனைவரும் இலவசமாக பயணம் செய்யலாம் என்ற கோப்பில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கையெழுத்திட்டுள்ளார்.
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் முதல்வராகப் பொறுப்பேற்றபின் முதல் முறையாக தலைமைச் செயலகம் வந்தார். அப்போது, அரிசி குடும்ப அட்டைகளுக்கு தலா ரூ. 4,000 ஆவின் பால் விலைக் குறைப்பு உள்பட 5 முக்கிய கோப்புகளில் கையெழுத்திட்டார்.
மு.க.ஸ்டாலின் முதலில் கையெழுத்திட்ட 5 முக்கிய கோப்புகள்!
இதில் ஒன்றாக அரசுப் பேருந்துகளில் மகளிருக்கு இலவசப் பயணம் என்ற திட்டத்தில் கையெழுத்திட்டார். மேலும் இது நாளை (மே 8) முதல் அமலுக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் உள்ள அரசுப் போக்குவரத்துக் கழகக் கட்டுப்பாட்டில் இயங்கும் சாதாரண கட்டண நகரப் பேருந்துகளில் பயணம் செய்யும் பணிபுரியும் மகளிர், உயர்கல்வி பயிலும் மாணவியர் உள்ளிட்ட அனைத்து மகளிரும் கட்டணமில்லாமலும், பேருந்துப் பயண அட்டை இல்லாமலும் நாளை முதல் பயணம் செய்யலாம் என்று அந்த ஆணையில் கூறப்பட்டுள்ளது.