தமிழக சட்டமன்றத் தேர்தலில் 6.6 சதவிகித வாக்குகளை நாம் தமிழர் கட்சி பெற்றுள்ளது. கடந்த 2019 நாடாளுமன்றத் தேர்தலில் 3.9 சதவிகித வாக்குகளைப் பெற்ற நாம் தமிழர் கட்சியின் வாக்கு சதவிகிதம் இந்தமுறை கணிசமான அளவு உயர்ந்துள்ளது.
இது அக்கட்சியின் தொண்டர்களை உற்சாகப்பட வைத்துள்ளது. வரும் காலங்களில் நாம் தமிழர் கட்சியின் வியூகம் என்ன?
சீமானிடம் பிபிசி தமிழுக்காக பேசினோம்.
கேள்வி: சட்டமன்றத் தேர்தலில் 6.6 சதவிகித வாக்குகளை நாம் தமிழர் பெற்றுள்ளது. வாக்குகளாகக் கணக்கிட்டால் 30,41,974 பேர் நாம் தமிழர் கட்சியை ஆதரித்துள்ளனர்.
இந்த வாக்கு சதவிகிதம் உங்களுக்கு மகிழ்ச்சியைத் தருகிறதா?”
பதில்: எங்களுடைய உழைப்புக்கு இது போதுமானதாக இல்லை. நாங்கள் 10 சதவிகிதம் வரையில் எதிர்பார்த்தோம். மீண்டும் மீண்டும் இந்த இரண்டு கட்சிகளை மட்டும் மக்கள் தேர்வு செய்வார்கள் என்றால் புதிய அரசியல் எப்படி மலரும்? பணம் மட்டுமே பெரிய அளவில் தீர்மானிக்கும் என்றால் எதையுமே சாதிக்க முடியாது. இங்கு மாற்ற வேண்டிய அம்சங்கள் நிறைய உள்ளன. எங்களுக்கு இன்னும் 2 விழுக்காடு வாக்குகளை மக்கள் செலுத்தியிருக்கலாம்.
கேள்வி: திருவொற்றியூரில் 48,497 வாக்குகளைப் பெற்றீர்கள். அங்கு தி.மு.க வெற்றி பெற்றுள்ளது. உங்களால் வெற்றி பெற முடியாததற்கு என்ன காரணம்?
பதில்: அங்கு நான் வெற்றி பெற்றிருக்கலாம். அந்தத் தொகுதியில் உள்ள கிறிஸ்துவர்கள் மற்றும் இஸ்லாமியர்களின் வாக்குகள் எங்களுக்கு விழவில்லை. அவர்கள் தி.மு.கவுக்கு வாக்களித்துவிட்டார்கள். பா.ம.கவுக்கு எதிராக உள்ள ஆதித் தமிழர்களும் தி.மு.க பக்கம் சென்றுவிட்டனர்.
தொடக்கத்தில் இருந்தே திருவொற்றியூர் மக்கள் எனக்கு மிகப் பெரிய நம்பிக்கையைக் கொடுத்தார்கள். சட்டமன்ற உறுப்பினர் போலவே நினைத்துத்தான் அவர்கள் என்னிடம் பேசினார்கள். ஆனால், களநிலவரம் வேறு மாதிரியாக அமைந்துவிட்டது. ஆதிக்குடிகளின் வாக்குகளும் கிறிஸ்துவ, இஸ்லாமியர் வாக்குகளும் வராமல் போனதுதான் பிரதான காரணம்.
கேள்வி: தனித்துப் போட்டி என்ற முழக்கத்தை தொடர்ச்சியாக நீங்கள் முன்னெடுப்பதுதான் வாக்கு சதவிகிதம் அதிகரிக்கக் காரணமா?”
பதில்: உண்மையிலேயே அதுதான் காரணம். ஒரு தலைவன் தனித்துவத்தை இழந்துவிட்டால் என்ன பேச முடியும்? ஏற்கெனவே கண்ணுக்கு முன்னால் எத்தனையோ கட்சிகள் காணாமல் போய்விட்டன. கூட்டணி சேருவதால் சில இடங்களில் வெல்லலாம். ஆனால், தனித்துவம் இருக்கிறதா எனப் பாருங்கள்.
அவர்கள் திராவிடக் கட்சிகளைச் சார்ந்துதான் பேச வேண்டும், சிந்திக்க வேண்டும். உங்கள் மூளைக்கு ஏற்ப வேலை செய்ய முடியாது. தத்துவத்தை இழந்துவிட்டால் எப்படித் தலைவனாக இருக்க முடியும்? எனக்குக் கூட்டணி தேவையில்லை. நான் மக்களை நம்புகிறேன். இத்தனை கோடி மக்கள் இருக்கிறார்கள். கூட்டணியெல்லாம் எதற்கு?
கேள்வி: கவனிக்கப்படாத சமூகங்களைச் சேர்ந்தவர்களை வேட்பாளர்களாக நிறுத்தியதையும் ஒரு காரணமாக எடுத்துக் கொள்ளலாமா?”
பதில்: அப்படியில்லை. நாங்கள் எவ்வளவோ பேசி வருகிறோம். நீர், நிலம் காப்பாற்றப்படுவது. கல்வி, மருத்துவம், கிராமப்புற பொருளாதாரம் ஆகியவற்றைப் பற்றியும் பேசி வருகிறோம். பொதுத்தொகுதிகளில் ஆதித்தமிழரை நிறுத்திய இடங்களில் கூடுதல் வாக்குகள் கிடைத்துள்ளன. கடந்த தேர்தலில் நாங்கள் கவனிக்கப்படவில்லை. இந்தத் தேர்தலில் கவனிக்கப்பட்டிருக்கிறோம்.
கேள்வி: தி.மு.க எதிர்ப்பு என்ற புள்ளியை மையமாக வைத்து இந்தத் தேர்தலில் வலம் வந்தீர்கள். ஆனால், பல தொகுதிகளில் அ.தி.மு.கவின் தோல்விக்கு நாம் தமிழர் வேட்பாளர்கள் காரணமாக இருக்கிறார்களே?
பதில்: தி.மு.க வெற்றியைத் தடுக்க வேண்டும், அ.தி.மு.க வெற்றியை பாதிக்க வேண்டும் என்றெல்லாம் நாங்கள் தேர்தல் வேலை பார்க்கவில்லை. நாங்கள் வெற்றி பெற வேண்டும் என்ற நோக்கத்தில்தான் தேர்தலில் பணியாற்றினோம்.
இதில் சிலருக்கு பாதிப்பு ஏற்பட்டிருக்கலாம். இனிவரும் காலங்களில் தி.மு.கவுக்கு அ.தி.மு.க மாற்று இல்லை என்ற முடிவுக்குக்கூட மக்கள் வந்திருக்கலாம். இனி அந்த எண்ணம் கூடிக் கொண்டே போகவும் வாய்ப்புள்ளது.
கேள்வி: அப்படியானால், 65 தொகுதிகளில் அ.தி.மு.க வென்றதை எப்படிப் பார்ப்பது?
பதில்: இங்கு தி.மு.க வந்துவிடக் கூடாது என ஒரு கூட்டம் நினைக்கிறது. அ.தி.மு.க வந்துவிடக் கூடாது என இன்னொரு கூட்டம் நினைக்கிறது. இதனால்தான் சிலருக்கு வாக்குகளாக விழுகின்றன.
அதேநேரம், எங்களைப் போன்றவர்களுக்கு வாக்களிக்கலாம் என்ற எண்ணமும் மக்கள் மத்தியில் படிப்படியாக வளர்ந்து கொண்டிருக்கிறது. அந்த நம்பிக்கையைக் கொடுக்க வேண்டும். அதைக் கொடுக்கும் வரையில் போராடித்தான் ஆக வேண்டும்.
கேள்வி: கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் 3.7 சதவிகித வாக்குகளைப் பெற்றது. இந்தமுறை அதன் வாக்கு விகிதம் 2.45 சதவிகிதமாக உள்ளது. இதை எப்படிப் பார்க்கிறீர்கள்?”
பதில்: அண்ணன் கமல்ஹாசன் பகுதிநேரமாக அரசியல் செய்கிறார். தேர்தல் வரும்போது மட்டும்தான் வெளியில் வருகிறார். மற்ற நேரங்களில் அரசியல் செய்வதில்லை. நாங்கள் மக்கள் பிரச்னைகளுக்காக களத்தில் நிற்கிறோம். ஒரு ஆர்ப்பாட்டமோ, போராட்டத்தையோ தினகரனோ, கமலோ நடத்தியதில்லை. இதுதான் காரணம்.
கேள்வி: தென் மண்டலத்தில் தினகரனின் அ.ம.மு.க பெரிய சக்தியாக மாறும் எனப் பேசப்பட்டது. அவர்கள் களத்தை இழந்ததை எப்படிப் பார்க்கிறீர்கள்?
பதில்: தினகரன், எடப்பாடி பழனிசாமி என இருவருமே, `அம்மா ஆட்சியை கொண்டு வருவோம்’ எனப் பேசி வந்தனர். இது குழப்பதை ஏற்படுத்தியிருக்கலாம்.
“கேள்வி: சசிகலா அரசியலுக்கு வருவதற்கு வாய்ப்பிருக்கிறதா?”
பதில்: அதை அவர்தான் முடிவெடுக்க வேண்டும். இனி அவர் அ.தி.மு.கவில் இணைந்து பணியாற்றுவாரா? அ.ம.மு.கவில் சேர்வாரா? என்பதை அவர்தான் முடிவு செய்ய வேண்டும்.
கேள்வி: இந்தத் தேர்தலில் 450 கோடி ரூபாய்களை தேர்தல் ஆணையம் பறிமுதல் செய்திருக்கிறது. ஆணையத்தின் செயல்பாடுகளை எப்படிப் பார்க்கிறீர்கள்?’
பதில்: பணநாயகத்தை தேர்தல் ஆணையம் அதிகரிக்கிறது. சாலைகளில் நின்று பணத்தைப் பறிமுதல் செய்வது தவறானது. அது மக்களின் பணம். வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பது தொடர்பாக திருச்சியில் கே.என்.நேரு பேசிய காணொலி வெளியில் வந்தது. `பணம் கொடுத்தால் 10 ஆண்டுகள் தேர்தலில் நிற்கத் தடை’ என முடிவெடுத்தால் பயப்படுவார்கள்.
இப்போதெல்லாம் பணம் கொடுப்பது என்பது உரிமைப் பிரச்னையாக மாறிவிட்டது. பணம் வரவில்லை என மக்களும் வீதிகளில் வந்து போராடுகிறார்கள். இதனால் நல்ல தேசம் உருவாவதற்கு வாய்ப்பில்லை. இதன்பிறகும், `நல்லாட்சியைக் கொடுப்போம்’ என்று கூறுவதெல்லாம் ஏமாற்று வேலைதானே?
கேள்வி: தமிழக தேர்தல் முடிவுகளை எப்படிப் பார்க்கிறீர்கள்?
பதில்: எங்களைப் பொறுத்தவரையில் வளர்ச்சியாகத்தான் பார்க்கிறேன். மக்கள் என் மீது வைத்திருந்த நம்பிக்கைக்கு ஏற்ற உயர்வு வரவில்லை என்றாலும் மேலும் மேலும் சோர்வில்லாமல் போட்டியிடுவதற்கான உந்துதலைக் கொடுத்துள்ளது.
அதேநேரம், இந்தத் தேர்தலில் 8,500 கிலோமீட்டர் பயணம் செய்துள்ளேன். ஏராளமான மேடைகளில் பேசினேன். எவ்வளவோ கருத்துகளை எடுத்துக் கூறினேன். பணம் இருந்தால்தான் அரசியல் என்பதைக் கற்றுக் கொடுத்துக் கொண்டே இருக்கிறார்கள். அதைத் தகர்க்க வேண்டும்.
அரசியல் கட்சிகளும் எந்தத் தேர்தல் வேலைகளையும் செய்யாமல் கடைசி 2 நாளில் பணம் கொடுத்து மாற்றிவிடுகிறார்கள். பரமக்குடியில் ஓர் அரசியல் கட்சி பிரமுகர், `நீங்க என்ன பேசினாலும் ஒரே இரவில் பணம் கொடுத்து முடித்துவிடுவோம்’ என்கிறார். 300, 500 ரூபாயெல்லாம் ஒரு பணமா? என்ன பிழை செய்கிறோம் என்பதே மக்களுக்குத் தெரியவில்லை”.
கேள்வி: முதல்வராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்றுவிட்டார். அவருக்கு நீங்கள் சொல்ல விரும்புவது என்ன?”
பதில்: அவர்தான் நிறைய ஆலோசகர்களை வைத்திருக்கிறாரே.. 100 நாள்களில் பிரச்னைகளைத் தீர்ப்பதாக உறுதிமொழி கொடுத்திருக்கிறார். அவர்கள் என்ன செய்கிறார்கள் என்பதைப் பார்த்துவிட்டு விரிவாகப் பேசுகிறேன்.”