ilakkiyainfo

இஸ்ரேல் – காசா: தீவிரமாகும் மோதலால் போர் மூளும் அச்சத்தில் மக்கள்

இஸ்ரேலிய ராணுவத்தினருக்கும் பாலத்தீன போராளிகளுக்கும் இடையே காசா பகுதியில் கடுமையாக தாக்குதல் நடந்து வருவதால், அந்த மோதல் முழு அளவிலான போராக மாறலாம் என்று ஐ.நா அச்சம் தெரிவித்துள்ளது.

இஸ்ரேலின் டெல் அவிவ் நகரை நோக்கி 1,000க்கும் அதிகமான ராக்கெட்டுகளை கடந்த 38 மணி நேரத்தில் பாலத்தீன போராளிகள் ஏவியுள்ளனர்.

அதற்கு பதிலடி தரும் வகையில் கடந்த செவ்வாய்க்கிழமை மற்றும் புதன்கிழமையன்று காசா பகுதியில் உள்ள இரண்டு கோபுரங்களை தகர்த்துள்ள இஸ்ரேலிய ராணுவம், நூற்றுக்கணக்கான வான் வழி தாக்குதலை நடத்தியிருக்கிறது.

கடந்த திங்கட்கிழமை முதல் குறைந்தபட்சம் 43 பாலத்தீனர்கள், ஆறு இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டிருக்கலாம் என்று அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதில் 13 பாலத்தீன சிறார்களும் அடங்குவர்.

இஸ்ரேல் – பாலத்தீன மோதல்

காசா வான்வெளியில் இஸ்ரேல் தாக்குதலுக்கு பின் காணப்பட்ட புகைமூட்டம்

இந்த நிலையில், நடந்து வரும் மோதல்களுக்கு தமது மிகப்பெரிய கவலையை வெளியிட்டிருக்கிறார் ஐ.நா பொதுச்செயலாளர் அன்டோனியோ கூட்டரெஷ்.

சமீபத்திய தாக்குதலின்போது வடக்கு காசா பகுதியில் இருந்து பீரங்கி எதிர்ப்பு டாங்கியில் இருந்து ஏவப்பட்ட ஏவுகணை எல்லையில் உள்ள ஜீப்பை தாக்கியது. அதில் ஒரு இஸ்ரேலிய நபர் கொல்லப்பட்டார், மூன்று பேர் காயம் அடைந்தனர்.

காசா பகுதியில் வீதியெங்கும் கட்டடங்களின் இடிபாடுகள் நிறைந்து காணப்படுகின்றன. பல கட்டடங்கள் நொறுங்கி தரைமட்டமாகியுள்ளன. இஸ்ரேலிய வான் தாக்குதலில் ஏராளமான கார்கள் உருக்குலைந்துள்ளன.

அங்கு தீவிரமாகும் மோதல்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து இஸ்ரேலிய நகரங்களில் இஸ்ரேலிய அரபுகள் நடத்திய போராட்டங்கள் வன்முறையாகியதால் டெல் அவிவ் நகருக்கு அருகே உள்ள லோத் பகுதியில் அவசரநிலை அறிவிக்கப்பட்டுள்ளது.

இஸ்ரேல் காசா

தங்களை நோக்கி ராக்கெட் தாக்குதல் நடத்தியதற்கு பதிலடியாக காசாவில் உள்ள தீவிரவாதிகளை நோக்கி நாங்கள் தாக்குதல் நடத்தினோம் என்று இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது.

ஹமாஸ் ஏவிய 90% ராக்கெட்டுகளை நடுவானில் இடைமறித்து அழித்து விட்டோம் என்கிறது இஸ்ரேல்.

இஸ்ரேல்-பாலத்தீனம் இடையே கடந்த பல ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு நிகழ்ந்து வரும் மோதல் காரணமாக இதுவரை குறைந்தது 31 பேர் உயிரிழந்துள்ளனர்.

ஜெருசலேமில் பதற்ற நிலை தொடர்ந்து நீடித்து வரும் நிலையில் இரு தரப்பினரும் அமைதியை கடைப்பிடிக்க வேண்டும் என்று சர்வதேச சமூகம் வலியுறுத்தி வருகிறது.

பாலத்தீன ஹமாஸ் போராளி குழுவைச் சேர்ந்தவர்கள் டெல் அவிவ் மற்றும் பிற பகுதிகளை நோக்கி ராக்கெட் தாக்குதல் நடத்தியுள்ளனர்.


இஸ்ரேல் தாக்குதல்

 

இதுவரை இஸ்ரேல் தரப்பில் மூவரும் பாலத்தீன தரப்பில் 28 பேரும் கொல்லப்பட்டுள்ளது உறுதியாகியுள்ளது.

கடந்த பல ஆண்டுகளாக இல்லாத அளவுக்கு இந்த முறை ராக்கெட் தாக்குதல் நடத்தியதன் மூலம் ஹமாஸ் அமைப்பு எல்லையை மீறி விட்டது என்று இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார்.

ரமலான் நோன்பு: கொரோனாவுக்கு மத்தியில் இஸ்லாமியர்கள் கடைப்பிடிப்பது எப்படி?
ரமலான் நோன்பு இருக்கும் போது உடலில் ஏற்படும் மாற்றங்கள் என்ன?

ஆனால் இஸ்ரேலின் ஆதிக்கம் மற்றும் தீவிரவாதத்தில் இருந்து ஜெருசலேமில் உள்ள அல்-அக்சா மசூதியை பாதுகாப்பதற்காகவே தாங்கள் இவ்வாறு செயல்படுவதாக ஹமாஸ் அமைப்பு தெரிவிக்கிறது.

2017ஆம் ஆண்டுக்குப் பின்பு மிகவும் மோசமான வன்முறையை ஜெருசலேம் நகரம் தற்போது சந்தித்து வருகிறது.

 

சமீபத்திய நிலவரம் என்ன?

டெல் அவிவ் மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் மீது ராக்கெட்டுகளை ஏவி தாக்குதல் நடத்தியதாக ஹமாஸ் தெரிவித்துள்ளது.

மக்கள் குடியிருக்கும் அடுக்குமாடி கட்டடங்களை எதிரிகள் தாக்கியதால் அதற்கு பதிலடியாக இதை செய்துள்ளோம் என்கிறது அந்த அமைப்பு.

இந்த தாக்குதலின் காணொளிகளும் வெளியாகியுள்ளன. டெல் அவிவ் நகரில் இரவு வானில் ராக்கெட்டுகள் கடந்து செல்வதைப் பார்க்க முடிகிறது.

இஸ்ரேலால் ஏவப்பட்ட ராக்கெட்டுகளை தடுத்து அழிக்கும் ஏவுகணைகளை நடுவானில் வெடித்து சிதறுவதையும் அந்தக் காணொளிகள் காட்டுகின்றன.

டெல் அவிவ் அருகே உள்ள ரிஷான் லேசியான் எனும் இடத்தில் நடந்த தாக்குதலில் 50 வயது பெண்ணொருவர் உயிரிழந்துள்ளதாக இஸ்ரேலிய காவல்துறை தெரிவிக்கிறது.

 

புறநகர்ப் பகுதியான ஹோலோன் எனும் இடத்தில் யாரும் இல்லாத பேருந்து ஒன்றில் மீது ராக்கெட் வந்து விழுந்தது என இஸ்ரேலியக் காவல் துறையின் செய்தித் தொடர்பாளர் மிக்கி ரோஷன்ஃபெல்டு ஏ.எஃப்.பி செய்தி முகமையிடம் தெரிவித்துள்ளார்.

ஹோலோன் நகரில் 5 வயதாகும் ஒரு குழந்தையும் இரண்டு பெண்களும் காயமடைந்துள்ளனர்.

ராக்கெட் தாக்குதல் நடந்த சமயத்தில் பாதசாரிகள் மற்றும் உணவகங்களில் சாப்பிட்டுக் கொண்டிருந்தவர்கள் பாதுகாப்பு தேடி ஓடியதாகவும், வேறு சிலர் நடைபாதைகளில் பாதுகாப்புக்காகத் தட்டையாகப் படுத்திருந்ததாகவும் ராய்ட்டர்ஸ் செய்தி முகமை தெரிவிக்கிறது.

பென் குரியோன் விமான நிலையத்தின் சேவைகள் சற்றுநேரம் முடக்கப்பட்டன. எய்லாத் மற்றும் ஆஷ்கேலோன் ஆகிய நகரங்களுக்கு இடையே எரிபொருள் கொண்டு செல்லும் குழாயும் தாக்குதலுக்கு உள்ளானது.

ஹனாடி டவர்ஸ் தவிர, இன்னொரு அடுக்கு மாடி கட்டடம் அங்கு குடியிருப்போர் மற்றும் அங்கிருப்பவர்கள் வெளியேற வேண்டும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்ட பின்பு தாக்கப்பட்டது என செய்திகள் தெரிவிக்கின்றன.

‘90% ராக்கெட்டுகளை தடுத்து அழித்துவிட்டோம்’

முன்னதாக செவ்வாயன்று இஸ்ரேலின் ஆஷ்கேலோன் நகரில் 60 வயதாகும் பெண் ஒருவரும் 80 வயதாகும் பெண் ஒருவரும் ராக்கெட் தாக்குதலில் கொல்லப்பட்டதாகவும் ஒருவர் தீவிரமாக காயமடைந்ததாகவும் மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

ஆஷ்கேலோன் மற்றும் அதன் அருகிலுள்ள ஆஸ்டோத் எனுமிடத்தில் மீதும் ஐந்து நிமிடத்தில் 137 ராக்கெட்டுகளை தாங்கள் ஏவியதாக ஹமாஸ் அமைப்பு தெரிவிக்கிறது.

ஹமாஸ் நடத்திய தாக்குதல்கள் காரணமாக இஸ்ரேலில் உள்ள மருத்துவமனைகளில் குறைந்தது 95 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

ஹமாஸால் தாக்குதல்களில் பயன்படுத்தப்பட்ட 90% ராக்கெட்டுகள் இடைமறித்து அழிக்கப்பட்டன என இஸ்ரேல் ராணுவம் தெரிவிக்கிறது.

காசாவில் இஸ்ரேலுடனான எல்லை அருகே தாக்குதல் நடத்துவதற்காக தோண்டப்பட்ட 2 சுரங்கங்களில் தாங்கள் அளித்துள்ளதாக இஸ்ரேல் ராணுவம் கூறுகிறது.

இஸ்ரேல் தாக்குதலில் குழந்தைகளும் கொல்லப்பட்டனர் என்கின்றது பாலத்தீன தரப்பு

இஸ்லாமிய ஜிகாதியவாத குழுவின் ராக்கெட் பிரிவின் தலைவர் சமத் அபேத் அல் -மக்லோத் மற்றும் ஹமாஸ் அமைப்பின் டாங்கிகளை அழிக்கும் பிரிவின் தலைவரும் இஸ்ரேல் தாக்குதலில் கொல்லப்பட்டுள்ளனர்.

காசாவில் 10 குழந்தைகள் உட்பட குறைந்தது 28 பேர் உயிரிழந்துள்ளனர் என்றும் 150க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளனர் என்றும் ஹமாஸ் அமைப்பின் கட்டுப்பாட்டில் இருக்கும் சுகாதார அமைச்சகம் தெரிவிக்கிறது.

உயிரிழந்தவர்களில் 59 வயதாகும் பெண் ஒருவரும் அவரது மாற்றுத்திறனாளி மகனும் அடக்கம் நகரில் மூன்று குழந்தைகள் உட்பட ஒரே குடும்பத்தை சேர்ந்த 7 பேர் இஸ்ரேல் தாக்குதலில் கொல்லப்பட்டுள்ளனர்.

‘இது வெறும் தொடக்கம்தான்’ – இஸ்ரேல்

இந்த தாக்குதல்கள் வெறும் தொடக்கம்தான் என இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சர் பென்னி கான்ட்ஸ் தெரிவித்துள்ளார்.

இஸ்ரேல் பதற்றத்தை மேலும் அதிகரிக்க வேண்டும் என விரும்பினால் அதற்கு தாங்களும் தயார் என்று ஹமாஸ் அமைப்பின் தலைவர் இஸ்மாயில் ஹானியே தெரிவித்துள்ளார்.

அவர்கள் நிறுத்த விரும்பினால் நாங்களும் நிறுத்திக்கொள்ள தயார் என்று தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பப்பட்ட உரையில் அவர் தெரிவித்தார்.

இஸ்ரேல்-பாலத்தீன பிரச்னை குறித்து விவாதிக்க இன்று புதன்கிழமை ஐக்கிய நாடுகள் மன்றத்தின் பாதுகாப்பு கவுன்சில் இன்று கூட உள்ளது.

Exit mobile version