முல்லைத்தீவு முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் முற்றத்தில் நிறுவுவதற்காக பொது நினைவுக்கல் நினைவேந்தல் பொது கட்டமைப்பால் கொண்டுவரப்பட்ட நிலையில் இராணுவம் பொலிஸார் முள்ளிவாய்க்கால் முற்றத்தில் குவிக்கப்பட்டுள்ளனர்.
எதிர்வரும் மே 18 அன்று நினைவேந்தல் திட்டமிட்டபடி சுகாதார விதிமுறைகளை பின்பற்றி நடைபெறும் என பொது கட்டமைப்பு அறிவித்திருந்த நிலையில் முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை வாசகம் பொறிக்கப்பட்ட பொது நினைவுக்கல் திரை நீக்கம் செய்யப்படுவதற்க்காக கொண்டுவரப்பட்டது.
இன்று மாலை 6 மணியளவில் நினைவேந்தல் கட்டமைப்பினரால் 6.5 அடி உயரமான பாரிய நினைவு கல் முள்ளிவாய்க்கால் பகுதிக்கு கொண்டுவரபட்டுள்ள நிலையில் இராணுவம் வருகை தந்து அருட்தந்தை லியோ ஆம்ஸ்ரோங்கிடம் விசாரணையில் ஈடுபட்டனர்.
பின்னர் முல்லைத்தீவு பொலிஸ் நிலையத்தை சேர்ந்த பொலிஸார் வருகை தந்து விசாரணைகளில் ஈடுபட்டதோடு பொலிஸாரிடம் அனுமதி பெற்றே முள்ளிவாய்க்காலில் எதுவாக இருந்தாலும் செய்யமுடியும் என நினைவேந்தல் பொதுக்குழுவினரிடம் தெரிவித்து இங்கு எதுவும் செய்ய முடியாது என தெரிவித்தனர்.
முள்ளிவாய்க்கால் பொது கட்டமைப்பை சேர்ந்த 6 பேர் முள்ளிவாய்க்கால் முற்றத்தில் நின்ற நிலையில் பொலிஸ் இராணுவம் 50க்கும் மேற்பட்டவர்கள் குவிக்கபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.