முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வாழக்கின் தலைமைப் புலனாய்வு அதிகாரியாக இருந்த கே. ரகோத்தமன் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார். அவருக்கு வயது 72.
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சென்னை முகப்பேரில் ஒரு தனியார் மருத்துவமனையில் நான்கு நாட்களுக்கு முன்பாக சேர்க்கப்பட்டிருந்த ரகோத்தமன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
உளுந்தூர்ப்பேட்டையைச் சேர்ந்த ரகோத்தமன், அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பொருளாதாரத்தில் பட்ட மேற்படிப்புப் படிப்பை நிறைவு செய்தவர். இதற்குப் பிறகு மத்திய புலனாய்வுத் துறையில் உதவி ஆய்வாளராக பணியில் சேர்ந்தார்.
ப. சிதம்பரம் கைது நடவடிக்கை: சிபிஐ-யின் மாண்பை குலைக்கிறதா? – ரகோத்தமன் பேட்டி
இதற்குப் பிறகு இந்தியாவில் பல்வேறு இடங்களில் பணியாற்றிய ரகோத்தமன் ஊழல், பொருளாதாரக் குற்றங்கள், வங்கி மோசடி, சிறப்பு மோசடி, பொதுத் துறை நிறுவனங்களில் நடந்த மோசடிகள் குறித்து விசாரித்தவர்.
மத்திய புலனாய்வுத் துறையில் முப்பத்தி ஆறு ஆண்டு காலம் பணியாற்றிய ரகோத்தமன், முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொல்லப்பட்டபோது, கார்த்திகேயன் தலைமையில் அமைக்கப்பட்ட சிறப்பு புலானாய்வுக் குழுவில், தலைமைப் புலனாய்வு அதிகாரியாக நியமிக்கப்பட்டார்.
தனது பணிக்காலமான 36 ஆண்டுகளில் பத்தாண்டுகளை ராஜீவ் காந்தி கொலை வழக்கிலேயே செலவழித்தார். பணி ஓய்வுக்குப் பிறகு, Human bomb என்ற ஆவணப்படத்தைத் தயாரித்தார். Conspiracy to Kill Rajiv Gandhi, Third Degree Crime Investigation Management ஆகிய புத்தகங்களை எழுதியிருக்கிறார். தொலைக்காட்சி விவாதங்களிலும் பங்கேற்று வந்தார்.