மன்னார் மாவட்டத்தில் இறுதியாக மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர்.பரிசோதனைகளின் போது 17 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் இந்த மாதம் தற்போது வரை 48 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக மன்னார் மாவட்டத்தில் அடையாளம் காணப்பட்டுள்ளதாக மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ரி.வினோதன் தெரிவித்தார்.
மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையில் இன்று (17.05.2021) காலை இடம் பெற்ற ஊடக சந்திப்பின் போது கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் அவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
மன்னார் மாவட்டத்தில் கடந்த மூன்று தினங்கள் மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர்.பரிசோதனைகள் கிடைக்கப்பெற்றுள்ளது. கடந்த 7 ஆம், 8ஆம் மற்றும் 10 ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர்.பரிசோதனைகளின் முடிவுகள் கிடைக்கப் பெற்றுள்ளது.
இதன் போது 17 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இவர்களுடன் சேர்த்து இந்த மாதம் 48 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இந்த வருடம் ஜனவரி முதல் தற்போது வரை 390 கொரோனா தொற்றாளர்களும், மாவட்டத்தில் மொத்தமாக 407 கொரோனா தொற்றாளர்களும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
பொது மக்கள் விழிர்ப்புடன் இருக்க வேண்டும். இந்த மாதம் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டவர்கள் வெளி மாவட்டங்களில் இருந்து வந்தவர்கள் அல்லது வெளி மாவட்டங்களுக்கு வேலைக்குச் சென்றவர்கள் அவர்களுடை குடும்பத்தாராக காணப்படுகின்றார்கள்.
குறிப்பாக வவுனியா, கிளிநொச்சி, திருகோணமலை, யாழ்ப்பாணம் மற்றும் மேல் மாகாணம் ஆகியவற்றில் இருந்து வந்தவர்கள் இவர்களுடன் தொடர்பானவர்கள் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
சமூதாயத்தில் இது வரை இவர்களின் தாக்கம் பாரிய அளவில் ஏற்படவில்லை.தற்போது மாவட்ட வைத்திய சாலையில் ஒரு தொற்றாளர் செயற்கை சுவாச கருவியின் உதவியுடன் சிகிச்சை பெற்று வருகின்றார்.
தற்போது வரை 3 கொரோனா மரணங்கள் நிகழ்ந்துள்ளது.
தாராபுரம் துருக்கி சிட்டி பகுதியில் அமைக்கப்பட்டுள்ள ஆண்களுக்கான கொரோனா இடை நிலை சிகிச்சை நிலையம் எதிர் வரும் புதன் கிழமையில் இருந்து இயங்கும்.
அதே போல் குணம் குறி அற்ற நோயாளர்கள் தமது வீடுகளில் சிகிச்சை பெறுகின்ற ஏற்பாடுகளுக்கான பொறிமுறைகள் தற்போது சுகாதார அமைச்சினால் தயாரிக்கப்பட்டு வருகின்றது.
குறித்த பொறிமுறைகள் நடைமுறைக்கு வந்தவுடன் அறிகுறியற்ற நோயாளர்கள் வீடுகளிலே சிகிச்சை பெற அனுமதிக்கப்படுவார்கள்.
மக்களுக்கு கொரோனாவிற்கான அறி குறிகள் குறிப்பாக காய்ச்சலுடன் மூச்சு எடுப்பதில் சிரமம் அல்லது சுவாச குணங்குறிகளுடன் மூச்சு எடுப்பதில் சிரமம் காணப்பட்டால் உடனடியாக அருகில் உள்ள வைத்தியசாலையை நாடுமாறும் அல்லது சுகாதார பிரிவினருக்கு அறிவித்து உடனடி அம்புலான்ஸ் வசதியை பெற்றுக்கொள்ளுங்கள் என அவர் மேலும் தெரிவித்தார்.