முள்ளிவாய்க்கல் இனப்படுகொலையின் 12 ஆவது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில், காங்கிரஸின் பெண் உறுப்பினரான டெபோரா ரோஸ், “இலங்கையில் பொறுப்புக்கூறலுக்கான செயற்றிறனுடைய சர்வதேச பொறிமுறையையும்: நிரந்தர அரசியல் தீர்வையும் கோரல்” எனும் தீர்மானத்தினை அறிமுகப்படுத்தியுள்ளார்.

 

முள்ளிவாய்க்காலில் ஆயுத மோதல்கள் நிறைவுக்கு வந்து 12ஆண்டுகளாகிவிட்ட நிலையில் போரின் இறுதியில் பாரிய தாக்குதல்களில் பல்லாயிரக்கணக்கான தமிழர்களின் உயிரிழப்புக்களுக்கு இலங்கை இராணுவம் காரணமாக உள்ளது.

பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்ட ஒரு தசாப்தத்திற்கும் அதிகமான காலம் கடந்துள்ள நிலையிலும் அக்குற்றங்களை புரிந்தவர்களை பொறுப்புக்கூறச் செய்வதற்கு இலங்கை அரசாங்கம் தவறிவிட்டது.

அத்துடன், ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவைக்கு அளித்த வாக்குறுதிகளில் இருந்து இலங்கை அரசாங்கம் பின்வாங்கியுள்ளது.

போர்க்குற்றங்கள் மற்றும் மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்களை நிவர்த்தி செய்யவோ, விசாரணைக்கு உட்படுத்தவோ, வழக்குத் தொடரவோ தவறியதால், குற்றங்களுடன் தொடர்புடையவர்களுக்கு உள்நாட்டில் தண்டனைகளற்ற நிலைமையே நீடிக்கின்றது.

அத்துடன்  உள்நாட்டு பொறிமுறை ஊடாக பொறுப்புக்கூறலையும் நீதியையும் அடையும் என்று இலங்கை அரசாங்கம் தொடர்ந்து கூறி வருகிறது.

இலங்கையில்  பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்கள் போரில் மரணமடந்துள்ளனர். காணாமல் போயுள்ளனர். துஷ்பிரயோகம் மற்றும் இடம்பெயர்வுகளை அனுபவித்துள்ளனர் என்பதை காங்கிரஸ் கட்சியின் தீர்மானம் கூட்டிக்காட்டுவதோடு  மிகவும் போரினால் பாதிக்கப்பட்ட பாரம்பரியமான தமிழர் தாயக பிராந்தியங்களில் இரண்டு பொதுமக்களுக்கு ஒரு சிப்பாய் என்ற அடிப்படையில் இராணுவ மயமாக்கல் காணப்படுகின்றது என்றும் குறிப்பிடுகின்றது.

 

அத்துடன் இலங்கையில் நிரந்தர அரசியல் தீர்வின் பெற்றுக்கொள்வதற்காக ஐ.நா.வின் கண்காணிப்பின் கீழ் வடகிழக்கில் வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று வடக்கு மாகாண சபை நிறைவேற்றியுள்ள தீர்மானத்தினையும் இந்தத் தீர்மானம் அங்கீகரிப்பதாக உள்ளது.

இதேவேளை, பிரேரணையை அறிமுகப்படுத்திய காங்கிரஸ் உறுப்பினரான டெபோரா ரோஸ், இலங்கை அரசாங்கமானது, மனித உரிமைகள் மீறல்கள் தொடர்பில் பொறுப்புக்கூறுவது அவசியமாகும்.

மேலும் பாதிக்கப்பட்ட தரப்புக்கான நீதி கிடைப்பதில், இலங்கை அரசாங்கம் தடையாக உள்ளது. அத்துடன் நிறுவனங்கள் ரீதியான சீர்திருத்தங்களுக்கும் தடையாக உள்ளது.  அத்துடன் தமிழர்கள் உட்பட சிறுபான்மை இனத்தவர்களின் உரிமைகளை மீறிச் செயற்பட்டுள்ளது என்று குறிப்பிட்டார்.

அத்துடன் குறித்த தீர்மானத்திற்கு இணைத்தலைமை வகித்த ஜோன்சன் கூறுகையில்,

இலங்கை அரசாங்கத்தை பொறுப்புக்கூற வைப்பதற்காக சர்வதேச பொறிமுறையை நிறுவுவதற்கான சர்வதேச சமூகத்தின் பணியையும் முயற்சிகளையும் நான் பாராட்டுகின்றறேன்.

போர்க்குற்றங்கள் மற்றும் மனித, சிவில் உரிமைகள் மீறல்களுக்கு நீதி மற்றும் பொறுப்புக்கூறலுக்கான காலதாமத வாக்குறுதிகளைப் தவிர்க்கும் ராஜபக்ஷ அரசாங்கத்தின் உறுதி மொழிகளை ஊக்குவிக்கிறேன் என்று காங்கிரஸ்காரர் தீர்மானத்திற்கு இணை தலைமை தாங்கிய ஜோன்சன் கூறினார்.

வடகிழக்கு மற்றும் புலம்பெயர் நாடுகளில் உள்ள தமிழர்கள் தொடர்ந்து சர்வதேச சமூகத்திடம் யுத்தக் குற்றங்கள் மற்றும் மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்களுக்கு இலங்கையை பொறுப்பேற்பதற்காக சர்வதேச பொறுப்புக்கூறல் பொறிமுறையை நிறுவுமாறு தொடர்ந்து அழைப்பு விடுக்க வேண்டும் என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.