நாட்டில் நிலவும் சீரற்ற வானிலையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளதுடன், உடைமைகளுக்கும் சேதம் ஏற்பட்டுள்ளது.
திருகோணமலை – திருக்கடவூரில் கடலுக்கு சென்ற மூன்று மீனவர்கள் காணாமற்போயுள்ளனர்.
நேற்று முன்தினம் (23) இவர்கள் கடலுக்கு சென்றுள்ளனர். கரைக்குத் திரும்பாத இந்த மீனவர்களைத் தேடும் பணிகளில் 10 படகுகள் ஈடுபட்டுள்ளன.
திருகோணமலையில் இன்று வீசிய பலத்த காற்றினால் வீடுகளுக்கு சேதம் ஏற்பட்டுள்ளது.
தோப்பூர் பகுதியில் வீடு ஒன்றின் கூரையும் மற்றுமொரு வீட்டின் தகட்டு வேலியும் காற்றில் அள்ளுண்டு சென்றுள்ளன.
மன்னார் – தாழ்வுபாடு பகுதியில் கடல் கொந்தளிப்பாகக் காணப்பட்டதால், அங்குள்ள படகுகள் நீரில் மூழ்கியுள்ளதுடன் வலைகள் நீரில் காணாமற்போயுள்ளதாக நியூஸ்ஃபெஸ்ட் செய்தியாளர் தெரிவித்தார்.