தற்போது அமுலில் இருக்கும் பயணக்கட்டுப்பாடுகள் ஜூன் மாதம் 14ஆம் திகதி வரையிலும் நீடிக்கப்படுமென பரவலாக தெரிவிக்கப்படுகின்றது. இன்னும் சில ஊடகங்களும் அவ்வாறே செய்திகளை வெளியிட்டுள்ளன.
இதனால், மக்களிடத்தில் ஒருவகையான அச்ச உணர்வு சூழ்கொண்டுள்ளது. தொடர்ந்து பயணக்கட்டுப்பாடுகள் நீடிக்குமாயின் அடுத்த கட்டமாக என்ன? செய்யலாம் என்பது தொடர்பிலும் மக்கள் சிந்திக்கத் தொடங்கிவிட்டனர்.
கொரோனா தொற்றின் மூன்றாவது அலைக்குப் பின்னர், மே 21ஆம் திகதியன்று அமுல்படுத்தப்பட்ட ஊரடங்கு சட்டம் மே 25ஆம் திகதியன்று அதிகாலை 4 மணிக்கு தளர்த்தப்பட்டு, அன்றிரவு 11 மணிக்கு மீண்டும் அமுல்படுத்தப்பட்டது.
இந்நிலையில், மே 31ஆம் திகதியும் ஜூன் 4ஆம் திகதியும் அவ்வாறே தளர்த்தப்பட்டு, ஜூன் 7ஆம் திகதி வரையிலும் பயணக் கட்டுப்பாடுகள் அமுல்படுத்தப்படுமென ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்து.
எனினும், மே. 28ஆம் திகதியன்று விடுக்கப்பட்ட விசேட அறிவிப்பில், மே.31 மற்றும் ஜூன் 4ஆம் திகதிய தளர்வுகள் இரத்துச் செய்யப்பட்டு, பயணக்கட்டுப்பாடுகள் ஜூன் 7ஆம் திகதி வரையிலும் நீடிக்கப்பட்டன.
இந்நிலையில், அமுலில் இருக்கும் பயணக் கட்டுப்பாடுகள், ஜூன் 14 ஆம் திகதி வரையிலும் நீடிப்பதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்பட்டதை கொவிட் -19 ஐ கட்டுப்படுத்தும் ஜனாதிபதி செயலணியின் பிரதானியான இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா நிராகரித்துள்ளார்.