இலங்கையின் கடற்கரைகளில் உயிரிழந்த கடல் வாழ் உயிரினங்களில் பெருமளவிலான உடல்கள் கரை ஒதுங்கி வருகின்றன.
இவ்வாறு இறந்து கரை ஒதுங்கிய கடல் வாழ் உயிரினங்களில் 6 ஆமைகள் மற்றும் ஒரு டொல்பினும் அடங்கும்.
நாட்டில் பல்வேறு இடங்களில் உயிரிழந்த மீன்கள் அதிகளவில் கரையொதுங்கி வருகின்றன. தெஹிவளை, வாத்துவை, இந்துருவ, கொஸ்கொட, பயாகல கடற்கரைகளில் கடல் ஆமைகள், டொல்பின் என்பன இறந்த நிலையில் கரையொதுங்கியுள்ளன.
எக்ஸ்- பிரஸ் பேர்ள் கப்பலில் அனர்த்தம் ஏற்பட்ட பின்னரும், அதற்கு முன்னரும் இறந்த கடல் வாழ் உயிரினங்கள் இவ்வாறு கரை ஒதுங்கியதை காணமுடிந்தது.
சில கடல் ஆமைகள் ஆபத்தான நிலைமையில் கரை ஒதுங்கி இருந்தன.
எக்ஸ்- பிரஸ் கப்பலில் அழிவை ஏற்படுத்தக் கூடிய அமிலங்கள், விஷ இரசாயனங்கள் ஏற்றிச் செல்லப்பட்டதுடன், அவை கடல் நீருடன் கலந்துள்ளன.
பொலித்தீன் உற்பத்திக்கான மூலப்பொருளான பொலித்தீன் துகள்கள் கடல் நீருடன் கலந்துள்ளதுடன், இறந்து கரை ஒதுங்கிய பல உயிரினங்களில் வாய் மற்றும் வயிற்றில் இந்த துகள்கள் காணப்பட்டதாக நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர்.
இலங்கையின் மேற்கு மற்றும் தெற்கு கடற் கரையோரங்களில் தொடர்ச்சியாக இறந்த கடல் வாழ் உயிரினங்களின் உடல்கள் கரையொதுங்க ஆரம்பித்துள்ளன. இன்று (06) ஞாயிற்றுக்கிழமை இவ்வாறு கரை ஒதுங்கிய 6 கடலாமைகள், ஒரு டொல்பின் மீனின் உடல்கள் மீட்கப்ப்ட்டுள்ளன.
இதில் குறிப்பாக இலங்கையின் கடலாமைகள் தொடர்பில் பிரசித்தமான இடமாக கருதபப்டும் கொஸ்கொட பகுதியில் மூன்று ஆமைகள் கரையொதுங்கியிருந்தன.
கரையொதிங்கிய ஆமைகள் தொடபில் பேராதனை பல்கலைகழகத்தின் மிருக மருத்துவ பீடம் ஊடாகவும் இதுகுறித்து ஆய்வுகளை முன்னெடுக்கவுள்ளன.