உ.பி மாநிலத்தில் ஒரு பெண்ணிற்கு திருமணம் நிச்சயிக்கப்பட்ட நிலையில் திருமண நாள் அன்று திருமண மண்டபத்துக்கு ஒரே நேரத்தில் வந்த இரண்டு மாப்பிள்ளைகளால் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உ.பி மாநிலம் எட்டா மாவட்டத்தை சேர்ந்த பெண் மோகினி இவருக்கும் புலன்பூர் கிராமத்தை சேர்ந்த பப்லு என்பவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது.
திருமணம் நிச்சயிக்கப்பட்ட நாள் அன்று பப்லு தன் வீட்டிலிருந்து ஊர்வலமாக புறப்பட்டு திருமணம் நடக்கும் மண்டபத்திற்கு சென்றார்.
இந்த ஊர்வலம் சென்ற சில நிமிடங்களில் ஹயாத்நகர் பகுதியை சேர்ந்த ராஜாராம் மகன் அஜித் என்பவரும் திருமண ஊர்வலமாக அதே மண்டபத்திற்கு வந்தார்.
அஜித்தும், மோகினியும் காதலித்து வந்துள்ளனர். இந்த காதலுக்கு மோகினியின் பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்தே பப்லுடன் திருமணம் நிச்சயித்துள்ளனர்.
இதை வேறு ஒரு நபர் மூலமாக தெரிந்து கொண்ட அஜித் தனது உறவினர்களுடன் திருமண கோலத்தில் ஊர்வலமாக மோகினியின் திருமணம் நடக்கவிருந்த மண்டபத்திற்கு சென்றுள்ளார்.
இதனால் அங்கு மூன்று வீட்டாருக்கும் இடையே சண்டை ஏற்பட்டுள்ளது. பலதரப்பட்ட பேச்சுவார்த்தைக்கு பின்பு மோகினி தனது காதலனான அஜித்தை திருமணம் செய்துள்ளார்.
இதையடுத்து பப்லுவின் வீட்டார் போலீசாரிடம் இது குறித்து புகார் அளித்து மோகினியின் குடும்பத்தினர் தங்களை ஏமாற்றிவிட்டதாக கூறியுள்ளனர்.
இது குறித்த போலீசார் வழக்குப்பதிவு செய்து மோகினியின் குடும்பத்தினரையும் அஜித்தின் குடும்பத்தினரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருமணம் மண்டபத்திற்கு இரண்டு மாப்பிள்ளைகள் ஊர்வலமாக வந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.