இருவரை கடத்தி, கண்டி அம்பிட்டிய – கால்தென்ன பகுதியின் குன்று ஒன்றின் உச்சிக்கு அழைத்து சென்று, கட்டை ஒன்றில் அவ்விருவரையும் சிலுவையில் அறைவதற்கு ஒப்பான விதத்தில், உள்ளங்கைகளில் ஆணிகளை அறைந்து சித்திரவதை செய்த சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மத்திய மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் நிலந்த ஜயவர்தனவின் மேற்பார்வையில் முன்னெடுக்கப்பட்ட விசேட நடவடிக்கையின் போது இந்த இருவரும் பொலிஸ் விஷேட அதிரடிப் படையின் உதவியுடன் பல்லேகலை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நேற்றைய தினம் இவ்விருவரும் கைது செய்யப்பட்டதாக விசாரணைகளை மேற்பார்வை செய்யும் மத்திய மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிச் மா அதிபர் நிலந்த ஜயவர்தன குறிப்பிட்டார்.
அத்துடன் இந்த குற்றச் செயலின் பிரதான சந்தேக நபராக கருதப்படும் மாந்திரீகர் துஷ்மந்தவை பொலிஸ் குழுக்கள் நெருகி வருவதாகவும் மிக விரைவில் அவரை கைது செய்ய திட்டம் வகுக்கப்பட்டு விசாரணைகள் இடம்பெருவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
சந்தேக நபர்களைக் கைது செய்ய ஐந்து சிறப்பு பொலிஸ் குழுக்களை களத்தில் ஈடுபடுத்தியுள்ளதாகவும் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் நிலந்த ஜயவர்தன குறிப்பிட்டார்.
போதைப் பொருள் கடத்தல் விவகாரங்களுடன் தொடர்புடையதாக கூறப்படும் மாந்திரீகர் ஒருவர் உள்ளிட்ட 10 பேர் இவ்விவகாரத்தின் சந்தேக நபர்களாக கருதி, அவர்களை தேடி சிறப்பு விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
கண்டி மற்றும் பலகொல்ல பொலிஸார் ஊடாக இந்த விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ள நிலையில், சம்பவத்தில் படுகாயமடைந்துள்ள கடத்தப்பட்டு சித்திரவவதைக்கு உள்ளாக்கப்பட்டுள்ள இருவருக்கும் கண்டி தேசிய வைத்தியசாலையில் தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வரும் நிலையில் அவர்கள் தேரி வருவதாக் பொலிஸார் கூறினர்.
கண்டி – பொல்கொல்ல பகுதியைச் சேர்ந்த 44 வயதுடைய ரத்நாயக்க முதியன்சலாகே மஞ்சுள நிசாந்த ரத்நாயக்க, கடுவலை – போமிரிய பகுதியைச் சேர்ந்த 38 வயதான ரத்நயக்க முதியன்சலாகே தொன் நிசான் கலிங்க ரத்நாயக்க ஆகியோரே இவ்வாறு வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வருவதாக பொலிஸ் பேச்சாளர் பதில் பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண குறிப்பிட்டார்.
கடந்த 25 ஆம் திகதி பிற்பகல் 2.30 மணியளவில், குறித்த இருவரும் சூட்சுமமாக, மாந்திரீகரின் வீட்டுக்கு கடத்தப்பட்டுள்ளதுடன், அங்கிருந்து மறு நாள் காலை 6.30 மணியளவில் அம்பிட்டிய பகுதில் உள்ள குன்றின் உச்சிக்கு அழித்து செல்லப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ளன.
வேனொன்றில் அம்பிட்டிய – கால்தென்ன குன்றினை நோக்கி கடத்தி நபர் ஒருவரை செல்வதாக பொலிஸ் அவசர அழைப்பு இலக்கத்துக்கு அறிவிக்கப்பட்ட நிலையிலேயே, அம்பிட்டியவிலிருந்து சுமார் இரண்டரை கிலோமீற்றர் தூரத்தில் உள்ள குறித்த குன்றின் உச்சியை முற்பகல் வேளையில் அடைந்த பொலிஸார், அங்கு கட்டை ஒன்றில் உள்ளங்கைகள் வைக்கப்பட்டு ஆணி அறையப்பட்ட நிலையில் இருந்த இருவரை மீட்டு வைத்தியசாலையில் அனுமதித்திருந்தனர்.
தொடர்ந்து முன்னெடுத்த விசாரணைகளில், கடத்தல் மற்றும் சித்திரவதைக்கு பயன்படுத்தப்பட்டதாக கூறப்படும் வேனை பொலிஸார் மீட்டுள்ளனர். குறித்த வேன் கண்டி – கொங்கல்ல பகுதியில் வாகனங்களை வாடகைக்கு வழங்கும் நிலையம் ஒன்றிலிருந்து வாடகைக்கு பெறப்பட்டுள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ள நிலையில், அந்த வாகனம் வாடகைக்கு விடும் நிலைய பொறுப்பாளரும் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்நிலையிலேயே மத்திய மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் நிலந்த ஜயவர்தன, கண்டி பிரதிப் பொலிஸ் மா அதிபர் சந்தன அழகக்கோன் ஆகியோரின் மேற்பார்வையில் கண்டி சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் சி.கே. ரத்நாயக்கவின் ஆலோசனைக்கு அமைய பலகொல்ல பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியின் கீழ் பிரதான விசாரணைகள் இடம்பெறுவதுடன் கண்டி குற்றத் தடுப்புப் பிரிவினர் அதற்கான உதவிகளை வழங்கி வருகின்றனர்.