ilakkiyainfo

யூரோ கோப்பை – ஸ்பெயின், இத்தாலி அணிகள் அரையிறுதிக்கு முன்னேறின

சுவிட்சர்லாந்துடனான ஆட்டத்தில் பெனால்டி ஷூட் முறையில் 3 – 1 என்ற கணக்கில் ஸ்பெயின் அணி அபார வெற்றி பெற்று அரையிறுதியில் நுழைந்தது.

ஐரோப்பிய கால்பந்து சாம்பியன்ஷிப் போட்டியில் ரஷியாவின் செயின்ட் பீட்டர்ஸ்பர்க்ட்கில் நேற்று நடந்த முதலாவது கால்இறுதி ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன் ஸ்பெயின் அணி, சுவிட்சர்லாந்தை எதிர்கொண்டது.

தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய ஸ்பெயின் அணிக்கு 8-வது நிமிடத்தில் கோல் வந்தது. கார்னரில் இருந்து வந்த பந்தை ஸ்பெயின் அணி வீரர் ஜார்டி ஆல்பா கோல் வலையை நோக்கி அடித்தார்.

அந்த பந்து சுவிட்சர்லாந்து நடுகள வீரர் டெனிஸ் ஜகாரியா காலில் பட்டு கோல் வலைக்குள் புகுந்து சுய கோலானது.

68-வது நிமிடத்தில் சுவிட்சர்லாந்து அணி பதில் கோல் திருப்பியது. அந்த அணி கேப்டன் ஹெர்டான் ஷாகிரி இந்த கோலை அடித்தார்.

இதனால் சமநிலை (1-1) ஏற்பட்டது. 77-வது நிமிடத்தில் எதிரணி வீரரின் காலில் பலமாக மிதித்த சுவிட்சர்லாந்து வீரர் ரெமோ புருலெர் நடுவரால் சிவப்பு அட்டை காட்டி வெளியேற்றப்பட்டதால் அதன் பிறகு அந்த அணி 10 வீரர்களுடன் விளையாட வேண்டியதானது.

வழக்கமான 90 நிமிடம் முடிவில் சமநிலை நீடித்ததால் கூடுதலாக 30 நிமிடம் ஒதுக்கப்பட்டது. அதிலும் முடிவு கிடைக்கவில்லை. இதனை அடுத்து வெற்றி, தோல்வியை நிர்ணயிக்க பெனால்டி ‘ஷூட்-அவுட்’ முறை கடைபிடிக்கப்பட்டது.

கோல் அடித்த இன்சைன்

பரபரப்பான பெனால்டி ஷூட்-அவுட்டில் ஸ்பெயின் அணி 3-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறியது.

இன்று அதிகாலை நடைபெற்ற மற்றொரு ஆட்டத்தில் இத்தாலி, பெல்ஜியம் அணிகள் மோதின.

முதல் பாதியில் இத்தாலி அணி 2 கோல்களை அடித்தது. பெல்ஜியம் சார்பில் 47-வது நிமிடத்தில் ஒரு கோல் அடிக்கப்பட்டது. அதன் பின் எந்த அணியும் கோல் அடிக்கவில்லை.

இறுதியில், இத்தாலி அணி 2-1 என்ற கோல் கணக்கில் அபார வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறியது.

Exit mobile version