பங்களாதேஷில் 51 சென்றி மீற்றர் உயரமுள்ள குள்ளமான பசுவை ஆயிரக்கணக்கானோர் ஊரடங்கை பொருட்படுத்தாமல் காண திரண்டு வருகின்றனர்.
இந்த பசு பங்களாதேஷ் தலைநகர் டாக்காவுக்கு அருகே 30 கிலோமீற்றர் தொலைவில் சாரிகிராமில் உள்ள ஷிகோர் என்பவரின் வேளாண் பண்ணையில் உள்ளது.
ராணி என பெயரிடப்பட்டு உள்ள அந்த பசு 51 சென்றி மீற்றர் நீளம் மற்றும் 26 கிலோகிராம் எடையை கொண்டுள்ளது. இந்தப் பசுதான் உலகிலேயே குள்ளமான பசு என, கூறப்படுகிறது.
கின்னஸ் உலக சாதனைகளில் மிகச்சிறிய பசுவை விட இது 10 சென்டிமீற்றர் குறைவு என்று அதன் உரிமையாளர்கள் கூறுகின்றனர்.
இந்தியாவில் கேரளாவைச் சேர்ந்த மாணிக்கம் என்ற பசுவை உலகின் குள்ளமான பசு என, கின்னஸ் உலக சாதனை அமைப்பு கடந்த 2014 இல் அங்கீகரித்தது. இதன் உயரம் 61 செ.மீ., என்பது குறிப்பிடத்தக்கது.
ராணி பசுவின் படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. பல்வேறு ஊடகங்களிலும் இது தொடர்பான செய்திகள் வெளியாகியுள்ளன.
இதனால், கொரோனா ஊரடங்கு கட்டுப்பாடுகளை மீறி இந்தப் பசுவை காண 15,000 பேர் வரை டாக்காவிலிருந்து தென்மேற்கே 30 கிலோமீற்றர் (19 மைல்) தொலைவில் உள்ள சாரிகிராமில் உள்ள அந்த பண்ணைக்கு சென்றுள்ளனர்.
அந்தப் பசுவுடன் செல்பி எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். இதையடுத்து, பார்வையாளர்களை அனுமதிக்க வேண்டாம் என, பண்ணை உரிமையாளரிடம் சுகாதாராத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளார்.