பானி பூரி’யின் மிக தீவிர ரசிகை ஒருவர், தன் திருமண நாளில், பானி பூரியால் செய்யப்பட்ட கிரீடத்தை தலையில் அணிந்து மகிழ்ந்த, ‘வீடியோ’ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
தெருவோர உணவுகளில் மிகப் பிரபலமானது பானி பூரி. வட மாநில சிற்றுண்டி வகையைச் சேர்ந்த இந்த உணவு, அனைத்து மாநிலங்களிலும் பாகுபாடின்றி பிரபலமாகி வருகிறது.
மொறுமொறுவென இருக்கும் சிறிய அளவிலான பூரியின் உள்ளே உருளைக்கிழங்கு, வெங்காயம் உள்ளிட்டவைகளை வைத்து, இனிப்பு, காரம், துவர்ப்பு சுவை கலந்த சட்னியை நிரப்பி பரிமாறப்படுகிறது. பிரியாணி ரசிகர்களை போல பானி பூரிக்கும் மிகப் பெரிய ரசிகர் வட்டம் உள்ளது.
சமீபத்தில் திருமணம் செய்துகொண்ட பானி பூரி ரசிகை ஒருவர், அந்த உணவின் மீதுள்ள தன் காதலை வெளிப்படுத்த விரும்பினார். இதற்காக அவருக்கு பானி பூரியால் செய்யப்பட்ட கிரீடத்தை அணிவித்து உறவினர்கள் மகிழ்ச்சி அடையச் செய்தனர்.
பானி பூரிகள் நிரப்பப்பட்ட தட்டின் முன் அமர்ந்துள்ள அவரது தலையில், உறவினர் ஒருவர் கிரீடத்தை அணிவிக்கிறார். இதையடுத்து, அவர் மகிழ்ச்சியில் முகம் மலர சிரிக்கும் வீடியோ, சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது.