மாகாணங்களுக்கிடையிலான பஸ் மற்றும் புகையிரத போக்குவரத்துக்கள் நாளை ஞாயிற்றுக்கிழமை முதல் ஆரம்பமாகவுள்ளன.
அரச உத்தியோகத்தர்களை நாளைமறுதினம் திங்கட்கிழமை முதல் சேவைக்கு அழைத்துள்ளமை மாகாணங்களுக்கிடையிலான போக்குவரத்து ஆரம்பிக்கப்பட்டுள்ளமைக்கான பிரதான காரணியாகும் என்று போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
அரச உத்தியோகத்தர்கள் நாளைமறுதினம் திங்கட்கிழமை முதல் சேவைக்கு அழைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்குத் தேவையான போக்குவரத்து வசதிகளை நாம் ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும்.
அதற்கமைய நாளைமறுதினம் முதல் வழமை போன்று காலை மற்றும் மாலையில் போக்குவரத்துக்கள் இடம்பெறும். எவ்வாறிருப்பினும் இடைப்பட்ட நேரத்தில் போக்குவரத்து இடம்பெற மாட்டாது.
காரணம் சுகாதார தரப்பினரின் அறிவித்தலுக்கமைய கொவிட் பரவல் அபாய நிலைமை அவ்வாறே காணப்படுகிறது. தொழிலுக்கு செல்வோரின் நலன் கருதியே நாம் இவ்வாறு போக்குவரத்துக்களை ஆரம்பித்துள்ளோம். சுகாதார பாதுகாப்பு விதிமுறைகளை கட்டாயம் பின்பற்றுமாறு பொது போக்குவரத்தில் ஈடுபடுவோருக்கு அறிவித்துள்ளோம்.
அதற்கமைய இருக்கைகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப மாத்திரமே பயணிகளை ஏற்றிச் செல்ல முடியும். இந்த சுகாதார விதிமுறைகளைப் பின்பற்றுமாறு தனியார் பொது போக்குவரத்திற்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.
போக்குவரத்து வழமைக்கு திரும்பவுள்ளதால் திங்கட்கிழமை முதல் பயணக்கட்டுப்பாடுகள் தளர்வடையக் கூடும் என்றார்.