இலங்கை கடற்பரப்பில் எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் தீவிபத்திற்குள்ளானதையடுத்து 417 கடலாமைகள் , 48 டொல்பின்கள் மற்றும் 8 திமிங்கிலங்கள் உயிரிழந்து கரையொதுங்கியுள்ளதாக பிரதி சொலிஸ்டர் ஜெனரல் மாதவ தென்னகோன் கொழும்பு மேலதிக நீதிவான் லோசனி அபேவிக்ரம முன்னிலையில் அறிவித்துள்ளார்.
வனஜீவராசிகள் திணைக்களத்தினால் குற்ற விசாரணப்பிரிவிற்கு வழங்கப்பட்டுள்ள தரவுகளின் அடிப்படையில் இவ்வாறு கடல் வாழ் உயிரினங்கள் உயிரிழந்துள்ளமை தொடர்பில் தெரியவந்துள்ளதாகக் குறிப்பிட்டு பிரதி சொலிஸ்டர் ஜெனரல் நீதிமன்றுக்கு அறிவித்தார்.
கப்பல் தீவிபத்திற்குள்ளான கடற்பரப்பிலிருந்து பெற்றுக் கொள்ளப்பட்ட கடல் நீர் மாதிரிகள் பெற்றோல் கூறுகள் காணப்படுவதாக இரசாயன பகுப்பாய்வு அறிக்கையின் மூலம் தெரியவந்துள்ளதாகவும் பிரதி சொலிஸ்டர் ஜெனரல் நீதிமன்றுக்கு அறிவித்தார்.
கப்பல் தீ விபத்திற்கு உள்ளானமையால் கடல் நீருடன் இரசாயன திரவங்கள் மற்றும் எரிபொருள் கலந்துள்ளதாகவும் அரச இரசாயன பகுப்பாய்வாளரால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாக பிரதி சொலிஸ்டர் ஜெனரல் நீதிமன்றில் சுட்டிக்காட்டினார்.
ஒவ்வொரு கடற்கரைகளில் கரையயொதுங்கியிருந்த கடல் வாழ் உயிரினங்களின் சடலங்கள் தொடர்பில் உரிய நீதிமன்றங்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதோடு , அவற்றின் சடலங்கள் அரச இரசாயன பகுப்பாய்வாளர் மற்றும் கால்நடை மருத்துவ நிலையம் ஆகியவற்றிடம் நீதிமன்ற அறிவிப்பிற்கமைய அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் பிரதி சொலிஸ்டர் ஜெனரல் நீதிமன்றில் அறிவித்தார்.