தன்னைப் பாலியல் வன்முறை செய்த பாதிரியார் ரோபின் வடக்கஞ்சேரியைத் திருமணம் செய்ய முடிவுசெய்திருப்பதாக அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.
கேரள மாநிலம் கண்ணூர் மாவட்டம் கொட்டியூர் சென் செபாஸ்டின் சர்ச் பாதிரியாராக இருந்தவர் ரோபின் வடக்கஞ்சேரி (40). மானந்தவாடி மறை மாவட்டத்துக்கு உட்பட்ட அந்த சர்ச்சுக்கு பிரார்த்தனைக்காக சென்றுவந்தார் 12-ம் வகுப்பு மாணவி ஒருவர்.
அந்த மாணவியிடம் கம்ப்யூட்டரில் டேட்டா என்ட்ரிக்காக உதவ வேண்டும் என அழைத்து பாலியல் வன்முறையில் ஈடுபட்டுள்ளார்.
மேலும் அதை வெளியே சொல்லக்கூடாது என மிரட்டியிருக்கிறார். அந்த மாணவி கற்பமானார். 2016-ம் ஆண்டு இந்த சம்பவம் நடந்தது. அந்த சமயத்தில் அவரது பெற்றோரை மிரட்டியும், பணம் தருவதாகக் கூறியும் இந்த விவகாரத்தை மறைக்கப்பார்த்திருக்கிறார்கள்.
இந்த விவகாரத்தை வெளியே தெரியாமல் மறைக்க சபை சார்பிலும், வேறு சில அதிகார மையங்கள் மூலமும் மாணவிக்கும் பெற்றோருக்கும் நெருக்கடி கொடுக்கப்பட்டிருக்கிறது.
மேலும், மாணவியை ரகசிய இடத்தில் மறைத்துவைத்து வழக்கை மறைக்கும் முயற்சிகள் நடந்துள்ளன.
2017-ம் ஆண்டு, பிப்ரவரி மாதம் 7-ம் தேதி தலசேரி தனியார் மருத்துவமனையில் சிறுமி குழந்தையைப் பெற்றெடுத்தார்.
அந்தக் குழந்தையை ஒரு கன்னியாஸ்திரீயும், மற்றொரு பாதிரியாரும் சேர்ந்து கடத்தியிருக்கிறார்கள்.
இதற்கிடையில் குழந்தையைக் காணவில்லை எனப் புகார் எழுந்ததால், பாதிரியாரின் விவகாரம் வெளி உலகுக்குத் தெரியவந்தது.
இந்தநிலையில், பாதிரியார் ரோபின் வடக்கஞ்சேரி மீது போக்சோ உள்ளிட்ட மூன்று பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. மாணவி பெற்றெடுத்த குழந்தையைக் கடத்தியதாக மற்றொரு பாதிரியார் மீதும் கன்னியாஸ்திரீ மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
மேலும், பாதிரியார் ரோபின் வடக்கஞ்சேரி சபையிலிருந்து நீக்கப்பட்டார். 2017, பிப்ரவரி 28-ம் தேதி பாதிரியார் கைதுசெய்யப்பட்டார்.
இந்த வழக்கில் மூன்று பிரிவுகளுக்கு தலா 20 ஆண்டுகள் என மொத்தம் 60 ஆண்டுக் கடுங்காவல் தண்டனை வழங்கியது தலசேரி போக்சோ நீதிமன்றம். மேலும், மூன்று தண்டனைகளையும் ஒரே காலத்தில் அனுபவிக்க வேண்டும் எனவும் தீர்ப்பில் குறிப்பிடப்பட்டிருந்தது. இப்போது பாதிரியார் சிறையில் இருக்கிறார்.
இந்தநிலையில், பாதிக்கப்பட்ட பெண் சுப்ரீம் கோர்ட்டில் மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார்.
அந்த மனுவில், தனது குழந்தைக்கு நான்கு வயது ஆகிறது என்றும், அந்தக் குழந்தையைப் பள்ளியில் சேர்க்கும்போது தந்தையின் பெயர் தேவை எனவும், எனவே, தான் பாதிரியார் ரோபின் வடக்கஞ்சேரியைத் திருமணம் செய்ய முடிவுசெய்துள்ளதாகவும், திருமணம் செய்துகொள்வதற்காக பாதிரியாருக்கு ஜாமீன் வழங்க வேண்டும் எனவும் மனுவில் குறிப்பிட்டிருந்தார்.
இது போன்று பாதிரியார் ரோபின் வடக்கஞ்சேரியும் ஜாமீன் கேட்டு மனுத்தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனுவுக்கு கேரளாவில் பரவலாக எதிர்ப்பு கிளம்பியது. பாதிரியார், அந்தப் பெண்ணின் மனுக்கள் சுப்ரீம் கோர்டில் இன்று விசாரணைக்கு வந்தன.
வழக்கை விசாரித்த நீதிபதிகள் அந்த மனுக்களைத் தள்ளுபடி செய்தனர். மேலும், திருமணம் செய்வது சம்பந்தமாக இருவரும் கேரள ஐகோர்ட்டை நாடலாம் எனவும் நீதிபதிகள் கூறியுள்ளனர்.