வங்கதேசத்தில் திருமண நிகழ்வில் பங்கேற்றவர்கள் மீது மின்னல் தாக்கியதில் 16 பேர் உயிரிழந்தனர்.
வங்கதேசத்தில் பெய்துவரும் பருவமழை அங்கு பெரும்சேதத்தை ஏற்படுத்தி வருகிறது. தென்கிழக்கு மாவட்டமான காக்ஸ் பஜாரில் கடந்த ஒரு வாரமாக சூறாவளிக் காற்றுடன் பெய்துவரும் கனமழையால் 20-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கின்றனர்.
இந்நிலையில், மேற்கு மாவட்டமான சாபானவாப்கஞ்சில் இன்று ஒரு திருமண நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
ஆற்றங்கரை ஓரமாக நடந்த இந்த நிகழ்வில் கலந்துகொண்டவர்கள் பலத்த மழை காரணமாக ஓர் இடத்தில் ஒதுங்கி இருக்கின்றனர்.
அப்போது திடீரென அந்த இடத்தை மின்னல் தாக்கியதால் அடுத்தடுத்த நொடிகளில் 16 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
மாப்பிள்ளைக்கு பலத்த காயம் ஏற்பட்டிருக்கிறது. மணப்பெண் அந்த இடத்தில் இல்லாததால் நல்வாய்ப்பாக உயிர் தப்பினார்.