பெரிய நாடுகளே, ஆப்கனிடம் பேச்சுவார்த்தை நடத்துவதைத் தவிர வேறு வழி இல்லை என்று இருக்க, ‘நாங்கள் அடி பணியமாட்டோம்’ என்கிறது பஞ்ஷீர்.
‘நாங்கள் தாலிபன்களிடன் வீழமாட்டோம்’ என்று ஆயுதம் தூக்கி நிற்கிறார்கள் பஞ்ஷீர் மக்கள். மொத்த ஆப்கனும் தாலிபன்களிடம் வீழ்ந்தாலும், பஞ்ஷீர் இன்னும் தன்னாட்சியுடன் தான் இருக்கிறது. இன்னும் தாலிபன்களிடம் பணியாமல் தனித்து நிற்கிறது. பெரிய நாடுகளே, ஆப்கனிடம் பேச்சுவார்த்தை நடத்துவதைத் தவிர வேறு வழி இல்லை என்று இருக்க, நாங்கள் அடி பணியமாட்டோம் என்கிறது பஞ்ஷீர். சரி… யார் இவர்கள்? இவர்களின் பின்னணி என்ன?
இதனைத் தெரிந்துகொள்வதற்கு முன், இப்போதைய நிலையை தெரிந்து கொள்ளலாம்.
‘பஞ்ஷீர் பள்ளதாக்கை நோக்கி தாலிபன் படை’
ஆப்கன் மாகாணங்கள் ஒவ்வொன்றாக தாலிபன்கள் கைகளில் விழுந்தன. சிலர் தங்களால் இயன்ற எதிர்ப்பைக் காட்டினார்கள், சில மாகாணங்கள் எந்த எதிர்ப்பையும் காட்டாமல் தாலிபன்களின் மேலாதிக்கத்தை ஏற்றுக்கொண்டன.
இந்த சூழலில் தாலிபன்களை இப்போது அல்ல எப்போதும் ஏற்றுக் கொள்ள மாட்டோம் என்று எதிர்த்து நிற்கின்றனர் பஞ்ஷீர்கள். அவர்களை வீழ்த்த தமது படைகளை பஞ்ஷீர் நோக்கி நகர்த்திக் கொண்டிருக்கிறது தாலிபன்.
Rahmat Gul
‘பஞ்ஷீர் அதிகாரிகள் நிர்வாகத்தை அமைதியாக எங்களிடம் ஒப்படைக்க மறுத்ததை அடுத்து, இஸ்லாமிய எமிரேட்ஸின் நூற்றுக்கணக்கான போர் வீரர்கள் பஞ்ஷீரைக் கைப்பற்ற அந்த பள்ளத்தாக்கை நோக்கி சென்று கொண்டிருக்கிறார்கள்’ என்று தங்களது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து இருக்கிறார்கள் தாலிபன்கள்.
பஞ்சீரை தங்களது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் அகமது மசூத் படை, ‘நாங்கள் அமைதியை விரும்புகிறோம், அமைதிப் பேச்சுவார்த்தை மீது நம்பிக்கை கொண்டிருக்கிறோம். ஆனால் அதே நேரம் எங்களது படை தாலிபன்களை எதிர்த்துப் போராட தயாராகவே உள்ளது’ எனக் கூறி உள்ளது.
தாலிபன்கள் முன்னர் ஆப்கனை கைப்பற்றிய போதும் பஞ்ஷீர் ஏறத்தாழ தனித்தே இயங்கியது. இதற்கு அதன் பூகோள அமைப்பும் முக்கிய காரணம்.
“எங்கு இருக்கிறது பஞ்ஷீர் பள்ளத்தாக்கு?”
ஆப்கன் தலைநகர் காபூலில் இருந்து வடக்கே 150 கிலோ மீட்டர் தொலைவில் இந்துகுஷ் மலைத் தொடர்ச்சியில் இருக்கிறது இந்த பஞ்ஷீர் பள்ளத்தாக்கு. வடக்கில் அமைந்துள்ள பஞ்ஷீர் மலையும், தெற்கில் அமைந்துள்ள குஹஸ்தான் மலையும் இயற்கையாகவே இதற்கு அரணாக அமைந்துள்ளன.
எப்போதும் பணி படர்ந்திருக்கும் இந்த மலைகள் ஆக்கிரமிப்பாளர்களுக்கும் எப்போதும் அச்சுறுத்தலாகவே இருந்து வருகின்றன.
பஞ்ஷீர்
முன்பு பஞ்ஷீர் பள்ளத்தாக்கு பர்வான் மாகாணத்தின் ஒரு பகுதியாக இருந்தது. 2004-ம் ஆண்டு இந்த பகுதி தனி மாகாணமாக அறிவிக்கப்பட்டது. இங்கு ஏறத்தாழ 1,50,000 மக்கள் வசிக்கின்றனர். இதில் பெரும்பாலான மக்கள் தஜீக் இன மக்கள்.
தாலிபன்கள் ஆப்கனின் ஒவ்வொரு பகுதியாக கைப்பற்றத் தொடங்கியபோது, சிலர் காபூல் சென்று அங்கிருந்து வெளிநாடுகளுக்கு தப்பிச் செல்ல திட்டமிட்டனர்.
சிலர் தங்கள் பாதுகாப்புக்காகச் சென்றது இந்த பஞ்ஷீர் பகுதிக்குதான். தாலிபன்களை ஏற்றுக்கொள்ளாமல் தன்னை நாட்டின் அதிபராக இப்போது அறிவித்துக் கொண்டிருக்கும் ஆப்கனின் துணை அதிபர் அம்ருல்லா சலே இருப்பதும் இந்த பஞ்ஷீர் பள்ளதாக்கில்தான். அங்கிருந்து கொண்டுதான் உலக நாடுகளின் உதவியை நாடிக்கொண்டிருக்கிறார் அம்ருல்லா.
“பஞ்ஷீர் அடிபணியாமல் இருக்க என்ன காரணம்?”
பஞ்ஷீர்கள் இப்போது மட்டுமல்ல எப்போதும் அடிபணிந்ததில்லை, எப்போதும் அவர்கள் ஆக்கிரமிப்பாளர்களின் ஆதிக்கத்தை ஏற்றுக்கொண்டது இல்லை.
1973-ம் ஆண்டில் ஆப்கன் தனி குடியரசு நாடான போது, கம்யூனிச மக்கள் ஜனநாயக கட்சி ஆதரவில் முகம்மது தாவூத் ஆப்கனின் முதல் அதிபர் ஆனார்.
அஹமத் ஷா மசூதுக்கு அப்போது 20 வயது. காபூல் பல்கலைக்கழகத்தில் படித்துக் கொண்டிருந்தார்.
ஜாமியத் இ இஸ்லாமி அமைப்பில் உறுப்பினராக இருந்த அஹமத் கம்யூனிசத்தை எதிர்தார். அதன் காரணமாக ஆப்கன் ஆட்சியையும் எதிர்த்தார்.
பஞ்ஷூர் பகுதியைச் சேர்ந்த இவர், ஆட்சிக்கு எதிராக அந்த பகுதியில் போராட்டத்தைத் தொடங்கினார்.
இதற்கு பாகிஸ்தான் உளவு அமைப்பு வழியாக அமெரிக்கா உதவியது, தாவூத் அரசு இந்தப் போராட்டங்களை ஒடுக்கியது, மசூத் பாகிஸ்தான் தப்பிச் சென்றார்.
1978-ம் ஆண்டு சோவியத் காபூலை கைப்பற்றியபோது, மீண்டும் பஞ்ஷீர் பகுதிக்கு திரும்பினார் அஹமத் ஷா மசூத். கம்யூனிசத்திற்கு எதிராக ஒரு கொரில்லா படையை அமைத்தார். அமெரிக்கா உதவிகளை வாரி வழங்கியது. சோவியத்துக்கு எதிரான களமாக பஞ்ஷீர் மாறியது.
1990 தாலிபன்கள் கரங்கள் ஓங்கிய போது இந்தக் கூட்டணி மாறியது. ரஷ்யா, இரான் மற்றும் இந்தியா பஞ்ஷீர் படையை ஆதரித்தன.
“தாலிபன்களுக்கு எதிராக…”
1996-ம் ஆண்டு காபூலை தாலிபன்கள் கைப்பற்றியபோது, அதிபர் ரப்பானியும், அப்போது பாதுகாப்பு அமைச்சராக இருந்த அஹமத் ஷா மசூதும் பஞ்சீர் பகுதிக்கு பின்வாங்கிச் சென்றனர். ‘பஞ்ஷீரின் சிங்கம்’ என்று அழைக்கப்பட்ட மசூத் தலிபன்களுக்கு எதிரான ஒரு படையைக் கூட்டினார்.
தொடர்ந்து தாலிபன்களுக்கு எதிராகப் போராடினார். ஆனால், 2011-ம் ஆண்டு செப்டம்பர் 9-ம் தேதி அல் கொய்தாவால் மசூத் கொல்லப்பட்டார். (அதாவது அமெரிக்காவின் இரட்டை கோபுரத்தை அல் கொய்தா தாக்குவதற்கு இரண்டு நாட்களுக்கு முன்பு)
ஆனால், மசூத் கட்டமைத்த படை தொடர்ந்து தாலிபன்களுக்கு எதிராக போராடி வருகிறது. அமெரிக்கா தாலிபன்களைத் தாக்கியபோது, அமெரிக்கப் படைகளுக்கு உதவவும் செய்தது.
இப்போது அஹமத் ஷா மசூத்தின் மகன் அஹமத் மசூத் பஞ்ஷீர் படைகளை வழிநடத்துகிறார்.
ஆப்கானிஸ்தான் : தாலிபன்களை எதிர்த்து நிற்கும் `பஞ்ஷீர்’ மக்கள் – யார் இவர்கள்? பின்னணி என்ன?
அவர் அனைவரையும் உள்ளடக்கிய ஓர் அரசை கோருகிறார். அதே நேரம் அவர் தாலிபன்களை எதிர்த்துப் போராட சர்வதேசத்தின் உதவியையும் கோருகிறார். “என் தந்தையின் வழி செல்ல நான் தயாராகவே உள்ளேன்.
ஆனால், அதற்கு அதிக ஆயுதங்கள், வெடி மருந்து தேவை” என்று கூறியுள்ளார். “சர்வாதிகாரத்தை எங்களால் பொறுத்துக் கொள்ள முடியாது” என்றும் அவர் கூறியுள்ளார்.
ஸ்பார்டன்களாக தாலிபன்களை எதிர்த்து நிற்கின்றனர் பஞ்ஷீர்கள். வரலாறு இதனை எப்படி குறிப்பெடுத்துக் கொள்ளப்போகிறது என காலம் சொல்லும்.
விகடன் பரிந்துரைக்கும் மற்ற கட்டுரைகள்…