அரசாங்கம் அறிவித்துள்ள பொது முடக்கத்தில் சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டிருந்தாலும், அதனை மிக அத்தியாவசியமான தேவைகளுக்கு மாத்திரமே மக்கள் பிரயோகிக்க வேண்டும் என்றும், யாழ். மாவட்டத்தில் கொரோனா பெருந்தொற்று அபாயம் மிக தீவிரமடைந்துள்ள நிலையில் பொதுமக்கள் தம் வீடுகளில் பாதுகாப்பாக இருப்பதே சிறந்தது எனவும் யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் க.மகேசன் பொது மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
நேற்று மாலை ஊடகங்களை சந்தித்து கருத்து தொிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
இந்தச் சந்திப்பின் போது அவர் மேலும் தெரிவிக்கையில்,
யாழ். மாவட்டத்தில் இன்று 148 பேருக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதேபோல மாவட்டத்தின் மொத்தத் தொற்றாளர்கள் எண்ணிக்கை 10 ஆயிரத்து 166 ஆக உயர்ந்துள்ளதுடன், கொரோனா காரணமாக ஏற்பட்ட மரணங்கள் 200 ஆக உயர்ந்திருக்கின்றது. மே மாதத்தின் பிற்பகுதியிலேயே இந்த அதிகரிப்பு இடம்பெற்றுள்ளது.
இன்றுவரை 3 ஆயிரத்துப் 19 குடும்பங்களைச் சேர்ந்த சுமார் 8 ஆயிரத்து 616 பேர் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்கள்.
வேலணை பிரதேசத்தில் ஒரு கிராமம் முற்றாக முடக்கப்பட்டிருக்கிறது. மேலும் தற்போது தினசரி தொற்றாளர்கள் எண்ணிக்கை சராசரியாக 130 வரை காணப்படுகின்றது. இது மோசமான அதிகரிப்பாகும்.
அரசாங்கம் அறிவித்துள்ள பொது முடக்கத்தில் சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டிருந்தாலும், அதனை மிக அத்தியாவசியமான தேவைகளுக்கு மாத்திரமே மக்கள் பிரயோகிக்க வேண்டும். யாழ்ப்பாணத்தைப் பொறுத்த வரையில் சில கட்டுப்பாடுகளை நாம் விதிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம்.
வைரஸ் தொற்றானது திரிபுடன் பரவுவதால் பொது மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும். 10 நாட்களில் வீடுகளில் இருப்பது எமது மாவட்டத்தையும், நாட்டையும் மோசமான நிலையிலிருந்து மீட்பதற்கு உதவியாக இருக்கும். எனவே மக்கள் பொறுப்புணர்வுடன் நடந்து கொள்வது பாதுகாப்பானாது என்று அவர் குறிப்பிட்டார்.
அதேவேளை, யாழ். மாவட்டத்திலுள்ள சகல பிரதேச செயலகங்கள் வாரியாகவும் தகவல் சேகரிக்கப்பட்டு அண்ணளவாக 57 ஆயிரம் பேருடைய விபரங்களை அனுப்பியுள்ளோம். அதன் முடிவுகள் எமக்கு கிடைத்தவுடன் நாளைய தினமே அரசாங்கம் அறிவித்த 2 ஆயிரம் ரூபாய் உதவித் தொகை வழங்கும் பணியை எம்மால் தொடங்க முடியும் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்.