முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீர தனது 65 ஆவது வயதில் இன்று (24) காலை காலமானார்.
COVID தொற்றுக்குள்ளாகி கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலையொன்றில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் காலமானார்.
இலங்கை அரசியலில் பல திருப்புமுனைகளுக்கு காரணமாக திகழ்ந்தவர் மங்கள சமரவீர.
அரசியல் பின்னணி கொண்ட மஹானாம சமரவீர, மற்றும் ஹேமா சமரவீர தம்பதியரின் புதல்வராக 1956 ஆம் ஆண்டு மங்கள சமரவீர பிறந்தார்.
அன்னாரின் தந்தையாரான மஹானாம சமரவீர, சிறிமாவோ பண்டாரநாயக்க ஆட்சிக்காலத்தில் உள்ளூராட்சி மன்றங்கள், வீடமைப்பு, தொலைத்தொடர்பு மற்றும் தபால் துறை அமைச்சராக பதவி வகித்திருந்தார்.
அன்னாரின் தாயாரும் மாத்தறை மாநகர சபையினூடாக மக்களுக்கு சேவையாற்றியுள்ளார்.
கொழும்பு ரோயல் கல்லூரியில் கல்வி கற்ற மங்கள சமரவீர, லண்டனிலுள்ள புனித மார்ட்டின் பல்கலைக்கழகத்தில் ஆடை வடிவமைப்பு மற்றும் தொழில்நுட்பம் தொடர்பில் பட்டம் பெற்றார்.
அன்னார், இலங்கை தேசிய திட்டமிடல் மையத்தில் வடிவமைப்பு ஆலோசகராக சில காலம் சேவையாற்றியிருந்தார்.
களனி பல்கலைக்கழகத்தின் அழகியல் ஆய்வு நிறுவகத்தில் வெளிவாரி விரிவுரையாளராகவும் மங்கள சமரவீர பணியாற்றினார்.
மங்களவின் அரசியல் பயணம்
அரசியல் வாரிசான மங்கள சமரவீர, 1983 ஆம் ஆண்டு ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் மாத்தறை மாவட்ட தலைமை அமைப்பாளராக தனது அரசியல் பயணத்தை ஆரம்பித்தார்.
பின்னர், கட்சியின் முன்னணி அரசியலில் ஈடுபடும் வாய்ப்பும் அவரை தேடி வந்தது.
மாத்தறை தேர்தல் மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தி, தேர்தலில் போட்டியிட்ட அவர், 1989 ஆம் ஆண்டு முதற்தடவையாக பாராளுமன்றத்திற்கு பிரவேசித்தார்.
1994 ஆம் ஆண்டு சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவின் அமைச்சரவைக்கு தெரிவாகியதன் பின்னர், மங்கள சமரவீர தமது ஆற்றலை வௌிப்படுத்தும் வகையில் மக்கள் சேவையில் ஈடுபட்டார்.
நகர அபிவிருத்தி, நிர்மாணத்துறை, தொலைத்தொடர்புகள் தபால் அமைச்சுகளை திறம்பட வழிநடத்திய மங்கள சமரவீர, அந்த அரசாங்கத்தின் பிரதி நிதி அமைச்சராகவும் பதவி வகித்தார்.
இந்த நாட்டில் மிகவும் பின்தங்கிய நிலையில் இருந்த தொலைத்தொடர்புத்துறையில் பாரிய மாற்றத்திற்கு தலைமை தாங்கியவர் மங்கள சமரவீர ஆவார்.
மாத்தறை மாவட்டத்தில் வரலாறு காணாத அபிவிருத்தியை ஏற்படுத்தவும் அவரின் செயற்பாடுகள் வழிவகுத்தன.
ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பல பதவிகளை ஏற்றிருந்த அவர், கட்சியின் முன்னேற்றத்திற்காகவும் குறிப்பிடத்தக்க சேவையை ஆற்றியுள்ளார்.
2001 ஆம் ஆண்டு தேர்தலில் அடைந்த தோல்வியை அடுத்து எதிர்க்கட்சியின் பிரதம கொறடாவாக நியமிக்கப்பட்டதுடன், ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பொருளாளராகவும் செயற்பட்டுள்ளார்.
2004 ஆம் ஆண்டு சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க ஆட்சியில் துறைமுகங்கள் விமான சேவைகள் மற்றும் ஊடகத்துறை அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர் பதவி மங்கள சமரவீரவிற்கு வழங்கப்பட்டது.
ஆழமாக நட்பு பாராட்டினாலும் தலைமைத்துவத்துடன் இணங்கி செயற்பட முடியாத சந்தர்ப்பங்களில், நேரடியாக எதிர்ப்பு தெரிவிக்கும் பண்பினை அவர் கொண்டிருந்தார்.
2006 ஆம் ஆண்டு மஹிந்த ராஜபக்ஸவை ஜனாதிபதியாக அரியணையில் அமர்த்த பாடுபட்ட மங்கள சமரவீர, அந்த அரசாங்கத்தின் வௌிவிவகார அமைச்சராக பதவியேற்றிருந்த நிலையில், அனுர பண்டாரநாயக்க மற்றும் ஶ்ரீபதி சூரியாராச்சி ஆகியோருடன் எதிர்க்கட்சியில் அமர்ந்தார்.
அப்போதைய அரசியல் தலைமைகளுக்கு சவால் விடுக்கும் வகையில், ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பிரிவாக புதிய பிரவாகத்தை ஆரம்பித்தார்.
பின்னர் ரணில் விக்ரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்து புதிய அரசியல் பயணத்தை மங்கள சமரவீர ஆரம்பித்தார்.
அன்று முதல் எதிர்க்கட்சியில் இருந்து அரசியலில் ஈடுபட்ட மங்கள சமரவீர, தாம் வெற்றிபெறச் செய்த மஹிந்த ராஜபக்ஸவை தோற்கடித்து மைத்திரிபால சிறிசேனவை ஜனாதிபதி கதிரையில் அமர்த்த பாரிய பங்களிப்பு செய்தார்.
நல்லாட்சி அரசாங்கத்தில் வௌிவிவகார அமைச்சர் பதவி மங்கள சமரவீர வசமானது.
நாட்டின் அரசியல் மாற்றத்தை முன்கூட்டியே அறிந்த மங்கள சமரவீர, 2019 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 17 ஆம் திகதி தாம் வகித்த நிதி அமைச்சர் பதவியை துறந்தார்.
அரசியல் பயணத்தில் நேரடி தீர்மானங்களை எடுப்பதில் மங்கள சமரவீர ஒருபோதும் பின்வாங்கியதில்லை.
2020 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 5 ஆம் திகதி நடைபெறவிருந்த தேர்தலில் போட்டியிடப்போவதில்லை என ஜூன் மாதம் அவர் விடுத்த அறிவிப்பு அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது.
தமக்காக ஒதுக்கப்பட்டிருந்த விருப்பு இலக்கத்திற்கு வாக்களிக்க வேண்டாம் என அவர் வேண்டுகோளும் விடுத்திருந்தார்.
அரசியலில் அவர் எப்போதும் ஒரு பேசுபொருளாக இருந்தார்.
தமது கருத்துக்களை நேரடியாக தெரிவிக்கவும், ஏனைய கருத்துக்கள் தொடர்பில் பகிரங்கமாக விவாதிக்கவும் மங்கள சமரவீர தயங்கியதில்லை. அவர் லிபரல் கொள்கையை கொண்டிருந்தார்.
எதிர்த்தரப்பில் இருந்தவர்கள் கூட அவரின் கொள்கைகளுக்கு மதிப்பளித்தனர்.
நாளுக்கு நாள் மாற்றம் காணும் உலகில், அன்னாரும் காலத்திற்கு ஏற்ற மாற்றங்களுடன் தம்மை புதுப்பித்துக்கொண்ட அரசியல்வாதியாவார்.
புத்தாக்கத்திறன் அவரின் வாழ்க்கைப் பயணத்தை மெருகூட்டியது.
காலமாவதற்கு சில தினங்களுக்கு முன்னதாக தற்காலத்திற்கு ஏற்ற இளைஞர்களுக்கான அரசியலை ஆரம்பிக்க அவர் முன் நின்றார்.
பொரளையில் இறுதிக்கிரியைகள் நடைபெற்றன
அவரின் இறுதிக்கிரியைகள் சுகாதார நடைமுறைகளுக்கமைய பொரளையில் இன்று மாலை நடைபெற்றன.
இதன்போது, ஆளும், எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அவருக்கு இறுதி அஞ்சலி செலுத்தினர்.