சென்னையில் மனைவி உயிரோடு இருக்கும் போது அவரின் தங்கையை திருமணம் செய்த ஆட்டோ டிரைவரை போலீஸார் கைது செய்தனர்.
சென்னை டிபிசத்திரம் மெயின்ரோடு பகுதியைச் சேர்ந்தவர் கணேஷ் (32). இவரின் மனைவி ரம்யா (29). இவர் சென்னை கீழ்ப்பாக்கம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் கடந்த 28.6.2021-ம் தேதி புகார் மனு ஒன்றைக் கொடுத்திருந்தார்.
இந்தநிலையில் 3.9.2021-ம் தேதி மீண்டும் ஒரு புகாரைக் கொடுத்தார். அதில் கூறியிருப்பதாவது, “நான் மேற்கண்ட முகவரியில் குடும்பத்துடன் குடியிருந்து வருகிறேன். என்னுடைய கணவர் கணேஷ் ஆட்டோ ஓட்டி வருகிறார்.
எங்களுக்கு 2011-ம் ஆண்டு சென்னையில் திருமணம் நடந்தது. எங்களுக்கு 10 வயதில் மகன் உள்ளான். எங்களுக்குள் சிறு சிறு குடும்ப பிரச்னைகள் வந்து சரியாகிவிடும்.
இந்தநிலையில் என்னுடைய பெரியம்மா மகள் லோகநாயகி (26) வடபழனி திருநகரில் பெற்றோருடன் வசித்து வருகிறாள்.
அவளுக்கு இன்னும் திருமணமாகவில்லை. அவள் வீட்டுக்குச் சென்ற போது என் தங்கை லோகநாயகிக்கும் என் கணவர் கணேஷிக்கும் பழக்கம் ஏற்பட்டது. அதை நான் தட்டிக்கேட்டபோது எனக்கும் என் கணவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.
இதன்காரணமாக என் கணவர் கணேஷ், என்னிடம் அடிக்கடி சண்டை போட்டு என்னை அடித்து துன்புறுத்தி வந்தார்.
மேலும் என் தங்கை லோகநாயகியை தனக்கு திருமணம் செய்து வைக்கும்படி கணேஷ் மருந்து குடித்தார். அப்போது லோகநாயகியின் பெயரை புலம்பினார்.
இந்தநிலையில் லோகநாயகியை திருமணம் செய்து வைக்கும்படி என்னை மிரட்டியதால் நான் கீழ்ப்பாக்கம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகாரளித்தேன். அதன்பேரில் போலீஸார் விசாரணை நடத்திவந்தனர்.
இந்தநிலையில் என் கணவரையும் தங்கை லோகநாயகியையும் கடந்த 28.6.2021-ம் தேதி முதல் காணவில்லை. தற்போது எனக்கு போன் செய்த என் கணவர், லோகநாயகியை திருவண்ணாமலை இளையநார் குப்பம் பெரியாயி கோவிலில் வைத்து திருமணம் செய்து விட்டதாக தெரிவித்தார்.
எனவே என்னை அடித்து கொடுமைப்படுத்தியதோடு நான் உயிரோடு இருக்கும் போது வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்ட என் கணவர் கணேஷ் மீது நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்” என மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
அதன்பேரில் இன்ஸ்பெக்டர் அமுதா இந்திய தண்டனைச் சட்டப்பிரிவுகள் 498(A), 494 ஆகியவற்றின் கீழ் வழக்குப்பதிவு செய்து ஆட்டோ டிரைவர் கணேஷைக் கைது செய்து சிறையில் அடைத்தனர்.