வெளிநாடுகளில், தங்கள் ஆதரவாளர்களிடமிருந்தும் நிதி வசூலித்திருக்கிறது தாலிபன். இதன் மதிப்பு மட்டும் 500 மில்லியன் டாலருக்கு மேல் என்கிறார்கள் வல்லுநர்கள்.
பிரீமியம் ஸ்டோரி
மீண்டும் ஒரு முறை ஆப்கனைக் கைப்பற்றியிருக்கிறது தாலிபன் படை. முழுமையான கட்டமைப்புடைய, வான் படைகொண்ட ஒரு ராணுவ அமைப்பை நிர்மூலம் ஆக்கியிருக்கிறது தாலிபன். இத்தனைக்கும் ஆப்கனுக்குப் பயிற்சி கொடுத்தது பெரியண்ணன் அமெரிக்கா.
இது எப்படிச் சாத்தியமானது? இத்தனைக்கும் அமெரிக்கா செலவிட்டது 1.5 ட்ரில்லியன் அமெரிக்கன் டாலர். அதாவது இந்திய மதிப்பில் ரூபாய் 10 லட்சம் கோடிக்கு மேல் என்கிறது அமெரிக்க ராணுவத்தின் ரகசிய அறிக்கை.
எல்லோருக்கும் இருக்கும் ஒரே கேள்வி, இதை வீழ்த்தும் அளவுக்கு பணம், ஆயுதம், கட்டமைப்பு தாலிபன்களுக்கு எப்படிக் கிடைத்தன என்பதுதான்!
`அவர்கள் புனிதப் பசு அல்ல!’
காபூலைக் கைப்பற்றிய பிறகு பத்திரிகையாளர்களைச் சந்தித்த தாலிபன் செய்தித் தொடர்பாளர்,
“இனி ஆப்கனில் எந்த போதை மருந்தும் பயிரிட மாட்டோம்” எனக் கூறியிருக்கிறார். “இளைஞர்கள் போதைக்கு அடிமையாவதைப் பொறுக்க மாட்டோம்” என அவர் பேசியிருக்கிறார்.
சரி… ஆப்கனை போதை மண்ணாக மாற்றியது யார்… யார் அங்கே அதிக அளவில் ஓபியம் பயிரிட்டார்கள்..? நிச்சயம் எந்தச் சந்தேகமும் வேண்டாம். இதற்கான விடை `தாலிபன்கள்’ தான்!
உலக அளவில் ஓபியம் வணிகத்தில் கொடிகட்டிப் பறந்துகொண்டிருக்கிறது ஆப்கன். 2011-ம் ஆண்டு கணக்கின்படி அதன் ஓபியம் ஏற்றுமதி மதிப்பு ஏறத்தாழ 3 பில்லியன் டாலர் என்கிறது ஆப்கன் மீட்டுருவாக்கத்துக்கான அறிக்கை ஒன்று.
ஆம்…ஆப்கன் அரசு ஆட்சி செய்த பகுதிகளில் சிறிதளவு ஓபியம் பயிரிடப்பட்டிருந்தாலும், பெருமளவில் ஓபியம் பயிரிடப்பட்டது தாலிபன் கட்டுப்பாட்டிலிருந்த பகுதிகளில்தான் என்கிறது அந்த அறிக்கை.
இப்போது புனிதப் பசு வேஷமிடும் தாலிபன்கள், ஓபியம் பயிரிட்டுக் கடத்தித்தான் பணம் பெற்றிருக்கிறார்கள். அதோடு, ஓபியம் பயிரிட விவசாயிகளை ஊக்குவித்து, அவர்களுக்கு வரி விதித்துத்தான் பணம் பெற்றிருக்கிறார்கள்.
இந்த ஓபியம் வணிகம் மூலம் மட்டும் தாலிபன்கள் பெற்ற தொகை ஆண்டுக்கு 400 மில்லியன் அமெரிக்க டாலர். அதாவது அன்றைய இந்திய மதிப்பில் தோராயமாக 2,500 கோடி ரூபாய்.
2017-ம் ஆண்டு முதல் இந்த ஓபியம் ஆய்வகங்களைக் குறிவைத்து அமெரிக்கப் படை தாக்குதல் நடத்தியது.
ஆனால், இதனால் பெரிதாக தாலிபன்களுக்கு எந்தச் சேதத்தையும் ஏற்படுத்த முடியவில்லை என்று 2018-ம் ஆண்டே கூறியிருக்கிறார் அமெரிக்க ராணுவ கமாண்டர் ஜெனரல் ஜோஷ் வோடெல்.
“சுங்கம்கட்டி உள்ளே வா!”
அடுத்து பெரும் நிதி தாலிபன்களுக்குக் கிடைத்தது சுங்கம் மூலம். தங்கள் கட்டுப்பாட்டிலுள்ள பகுதிகளில் பயணிக்கும் அல்லது அதன் ஊடாகப் பயணிக்கும் வாகனங்களுக்குச் சுங்கவரி வசூலித்திருக்கிறார்கள் தாலிபன்கள்.
வாகனங்களுக்கு மட்டும் அவர்கள் சுங்கம் வசூலிக்கவில்லை. தங்கள் பகுதி வழியாகப் பதிக்கப்பட்ட டெலிபோன் கம்பி வடங்களுக்கும், அந்தத் தொலைத் தொடர்பு நிறுவனத்திடமிருந்து வரி வசூல் செய்திருக்கிறார்கள்.
மின்சாரத்தைப் பயன்படுத்தும் மக்களிடமிருந்தும் பணம் வசூல் செய்திருக்கிறார்கள்.
இதன் மூலமாக அவர்கள் பெற்ற நிதி 2 மில்லியன் டாலர் என்று 2018-ம் ஆண்டு கூறியது ஆப்கன் மின் நிறுவனம்.
“கனிம வளங்களும் எங்களுக்கே!”
ஆப்கானிஸ்தான் கனிம வளங்கள் நிறைந்த நாடு. பல ஆண்டுப் போர் காரணமாக கனிம வளங்கள் அனைத்தும் இன்னும் எடுக்கப்படாமல் பூமிக்கு அடியிலேயே புதைந்திருக்கின்றன.
இன்றைய மதிப்பில் இந்திய ரூபாயில் 15 லட்சம் கோடி மதிப்பிலான கனிம வளங்கள் ஆப்கனில் புதைந்துகிடக்கின்றன.
தாலிபன்கள் கட்டுப்பாடிலிருந்த பகுதிகளில் இந்தக் கனிம வளங்கள் எடுகப்பட்டிருக்கின்றன. 2014-ம் ஆண்டு கணக்குப்படி 10 மில்லியன் அமெரிக்க டாலர் இதன் மூலம் தாலிபன்களுக்குக் கிடைத்திருக்கிறது என்கிறது ஐ.நா-வின் ஒரு பிரிவு.
அமெரிக்கப் படை
அது மட்டுமல்லாமல் வெளிநாடுகளில் தங்கள் ஆதரவாளர்களிடமிருந்தும் நிதி வசூலித்திருக்கிறது தாலிபன். இதன் மதிப்பு மட்டும் 500 மில்லியன் டாலருக்கு மேல் என்கிறார்கள் வல்லுநர்கள்.
சரி… இவ்வளவு நிதி வந்திருக்கலாம். ஆனால், இது அமெரிக்கா செலவிட்ட தொகையில் கால் பங்குகூட இல்லையே! இது மட்டுமல்லாமல் நேட்டோ நாடுகளும் ஒரு பெரும் தொகையை ஆப்கனில் செலவிட்டிருக்கின்றன அல்லவா…
பெரும் தொழில்நுட்பங்களைக்கொண்ட அமெரிக்கா, நவீன பயிற்சிகளையும் ஆப்கன் ராணுவத்துக்கு வழங்கியதுதானே! பின் எப்படி இவ்வளவு பரிதாபகரமாக ஆப்கன் ராணுவம் தோற்றது… காபூலைப் பிடிக்க மூன்று மாதங்கள் ஆகும் என கணிக்கப்பட்டிருந்த சூழலில் ஒரே நாளில் காபூல் கைப்பற்றப்பட்டது எப்படி?
இது குறித்து விரிவாகப் பேசுகிறார் அமெரிக்கா கலிஃபோர்னியா பல்கலைக்கழகத்தின் வரலாற்றுப் பேராசிரியர் இப்ராஹிம் அல் மராஷி.
“மீண்டும் அதே படம்!”
“அமெரிக்காவால் பயிற்சியளிக்கப்பட்ட ராணுவம் தோல்வி அடைவது இது முதன்முறை அல்ல. இராக்கில் என்ன நடந்தது? எப்படி ஐ.எஸ் அமைப்பால் மிகச் சுலபமாகப் பல பகுதிகளைக் கைப்பற்ற முடிந்தது என்ற கேள்வியை முன்வைத்து அதற்கான பதிலையும் தருகிறார்.
“அமெரிக்காவால் ஆப்கன் கலாசாரத்தைப் புரிந்துகொள்ள முடியவில்லை. இதைப் புரிந்துகொள்ளாமல், தமது இறுக்கமான கொள்கைகளை ஆப்கனில் அமல்படுத்தியது முதல் காரணம்” என்கிறார்.
இரண்டாவது காரணமாக அவர் குறிப்பிடுவது “ஒற்றுமையற்ற பலவீனமான ராணுவத்தால், கொள்கை உறுதி பூண்ட எதிராளிகளை எதிர்கொள்ள முடியவில்லை’’ என்பதுதான்.
“மூன்றாவது காரணம், பலவீனமான தலைமை. ராணுவத்தில் புரையோடியிருந்த ஊழலும் வீழ்ச்சிக்கு முக்கியக் காரணம்“ என்று குறிப்பிடுகிறார் இப்ராஹிம்.
“இதேதான் இராக்கிலும் நடந்தது. அதனால்தான் ஐ.எஸ் அமைப்பால் அப்போது வெற்றி பெற முடிந்தது’’ என எழுதுகிறார் இப்ராஹிம்.
“இராக் மற்றும் ஆப்கனின் கலாசாரம் வேறாக இருக்கலாம்; அவர்களது சமூக, பொருளாதாரச் சூழல் வேறாக இருக்கலாம். ஆனால், இந்த மூன்று காரணங்களும் அந்த இரு நாடுகளிலும் சரியாகப் பொருந்துகின்றன’’ எனக் குறிப்பிடுகிறார் இப்ராஹிம்.
“இதன் காரணமாகத்தான் மூன்று லட்சம் ராணுவ வீரர்கள், 60,000 தாலிபன்களிடம் வீழ்ந்திருக்கிறார்கள்’’ என்று சொல்கிறார் இப்ராஹிம்.
ராணுவத்தின் அரசியல்
`ஆப்கன் ராணுவத்தில் ஊழல் புரையோடியிருந்தது. ராணுவத்தின் உயர் மட்டத்தில் இருந்தவர்கள் பொய்க் கணக்கு எழுதி பணத்தைக் கொள்ளையடித்தார்கள்.
இது கடைநிலை ஊழியர்களுக்குக் கோபத்தை உண்டாக்கியது. ஒரு கட்டத்தில் அவர்களுக்கு இது அயர்ச்சியைத் தந்தது.
சில கடைநிலை ராணுவ வீரர்கள் மக்களிடமிருந்து லஞ்சம் பெற்றார்கள். இதன் காரணமாக அவர்கள் மக்களின் நம்பிக்கையை இழந்தார்கள்’ என்று தனது ‘அரசுக் கொள்ளையர்கள்: உலக அமைதியை அச்சுறுத்தும் ஊழல்’ புத்தகத்தில் எழுதுகிறார் சாரா.
ஆப்கானிஸ்தான்
அதுமட்டுமல்லாமல், ராணுவத்தில் தங்களுக்கு வேண்டப்பட்டவர்களுக்கே பதவிகள் வழங்கப்பட்டதும், ராணுவ வீரர்களின் உறுதியைக் குலைத்திருக்கிறது.
ராணுவத்தின் தோல்விக்கு இதே காரணங்களைக் குறிப்பிடுகிறார் அல் ஜசீராவில் பணியாற்றும் மூத்த அரசியல் பத்திரிகையாளர் மர்வன் பிஷாரா.
சிங்கப்பூர் ராஜரத்தினம் சர்வதேசக் கல்வி மையத்தைச் சேர்ந்த அப்துல் பாஸித்தும் இதே காரணங்களையே குறிப்பிடுகிறார். மேலும் அவர், “ராணுவ அதிகாரிகள் பந்தாடப்பட்டுக்கொண்டே இருந்தனர். உள்துறை அமைச்சரும் மாற்றப்பட்டுக்கொண்டே இருந்தார்” என்று எழுதுகிறார்.
இது நிச்சயம் களத்திலிருக்கும் ராணுவ வீரர்களின் உறுதியைக் குலைத்திருக்கும். ஒரு காத்திரமான திட்டம் வகுப்பதிலும் இது ஆதிக்கம் செலுத்தியிருக்கும்.
அமெரிக்கா ஆப்கன் ராணுவத்துக்கு மட்டும் நேரடியாகச் செலவு செய்த தொகை 83 பில்லியன் டாலர். ஊழல், வெற்று அரசியல் காரணங்கள் இந்தத் தொகையை பயனற்றதாக்கிவிட்டன!