கிளிநொச்சி குளத்திற்கு அருகில் விபத்தை ஏற்படுத்தி விட்டு தப்பிச்செல்ல முற்பட்ட முச்சக்கர வண்டி வாய்க்காலுக்குள் வீழ்ந்துள்ளதோடு அதன் சாரதி தப்பி ஓடிவிட்டார்.
இச் சம்பவம் இன்று (25) நண்பகல் கிளிநொச்சி குளத்திற்கு அருகில் உள்ள ஐந்தடிவான் பகுதியில் ஏற்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
கிளிநொச்சி குளத்திற்கு அருகில் ஐந்தடிவான் பகுதியில் மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்த காப்புறுதி நிறுவனம் ஒன்றில் பணியாற்றும் யுவதி ஒருவரை முச்சக்கரவண்டியில் சென்றவர் மோதியுள்ளார்.
இதன்போது யுவதி வீதியில் வீழ்ந்து கிடக்க அதனை பொருட்படுத்தாத முச்சக்கரவண்டி சாரதி தப்பிச் செல்ல முற்பட்டுள்ளார்.
இதன்போது தப்பிச் செல்ல முற்பட்ட முச்சக்கர வண்டியை பிடிப்பதற்கு வீதியில் பயணித்தவர்கள் துரத்திய போது வேகமாக சென்ற முச்சக்கர வண்டி வேகக்கட்டுப்பாட்டை இழந்து வாய்க்காலுக்குள் வீழ்ந்துள்ளது.
இருப்பினும் சாரதி முச்சக்கரவண்டியையும் விட்டுவிட்டு தப்பிச் சென்றுவிட்டார்.
விபத்திற்குள்ளான யுவதி சிறு காயங்களுக்குள்ளாகியுள்ளார். பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.