கொரோனா தடுப்பூசி செலுத்த சென்றவருக்கு வெறிநாய் கடிக்கு செலுத்தப்படும் ஊசி மருந்து செலுத்தப்பட்ட சம்பவமொன்று,இந்தியா – மகாராஷ்டிரா மாநிலத்தில் இடம்பெற்றுள்ளது.
மகாராஷ்டிரா மாநிலம், தானே அருகே உள்ள கல்வா அட்கோன்னேஷ்வர் நகர் பகுதியில், ராஜ்குமார் யாதவ் என்பவர் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்வதற்காக அங்குள்ள சுகாதார நிலையமொன்றுக்குச் சென்றுளார்.
இதன்போது அங்கு பணியில் இருந்த வைத்தியர் ராக்கி தாவ்டே மற்றும் தாதி கீர்த்தி ராயத் ஆகியோர் ராஜ்குமார் யாதவுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தினர்.
அதன் பின்னர், குறித்த நபருக்கு செலுத்திய மருந்து போத்தலை கவனித்தபோது, அது கொரோனாவுக்கான தடுப்பூசி இல்லை எனவும், அது வெறிநாய் கடிக்கு செலுத்தப்படும் ரேபிஸ் ஊசி மருந்து எனவும் தெரியவந்தது.
இது குறித்து ராஜ்குமார் யாதவ், தானே மாநகராட்சியில் முறைப்பாடு செய்ததை தொடர்ந்து, சுகாதாரத்துறை அதிகாரிகள் விசாரணை முன்னெடுத்துள்ளனர்.
இதையடுத்து, சம்பவத்தடன் தொடர்புடைய வைத்தியரும் தாதியும் பணி இடைநீக்கம் செய்யப்பட்டனர்.
மேலும், பாதிக்கப்பட்டவருக்கு தேவையான சிகிச்சைகள் வழங்கப்பட்டு வரும் நிலையில், தற்போது அவர் நலமுடன் இருப்பதாகவும் மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.