ilakkiyainfo

ஷாருக் கான் மகன் ஆர்யன் கான் நர்கோடிக்ஸ் கன்ட்ரோல் பீரோவால் கைது : மும்பை சொகுசுக் கப்பலில் போதை விருந்து?

பிரபல இந்தி நடிகர் ஷாருக் கான் மகன் ஆர்யன் கானிடம் அரசின் போதைப் பொருள் கட்டுப்பாட்டு அமைப்பான நர்கோடிக்ஸ் கன்ட்ரோல் பீரோவால் ( என்.சி.பி.) கைது செய்யப்பட்டுள்ளார். நேற்று இரவு முதல் அவர் விசாரணைக்கு உள்படுத்தப்பட்டிருந்தார்.

போதையூட்டும் பொருட்களின் கட்டுப்பாடு மற்றும் வரைமுறை தொடர்பான என்.டி.பி.எஸ் (Narcotic Drugs and Psychotropic Substances Act) சட்டத்தின் 8C, 20 B, 27 ஆகிய பிரிவுகளின்கீழ் அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

அக்டோபர் 2-ம் தேதி சனிக்கிழமை இரவு மும்பை கடலோரம் நின்ற ஒரு சொகுசுக் கப்பலில் நர்கோடிக் கன்ட்ரோல் பீரோ ரெய்டு நடத்தியது. அப்போது அந்தக் கப்பலில் போதை பார்ட்டி நடந்துகொண்டிருந்ததாக குற்றம்சாட்டப்படுகிறது.

ஆர்யன் கான் உட்பட 8 பேரை பிடிபட்டிருப்பதை என்.சி.பி. மும்பை இயக்குநர் சமீர் வான்கடே முன்னரே உறுதி செய்திருந்தார்.

நியாயமான விசாரணை நடக்கும் – என்.சி.பி.

மும்பை கடற்கரையோரம் ஒரு சொகுசுக் கப்பலில் நடந்ததாக சொல்லப்படும் ரேவ் பார்ட்டி எனப்படும் போதை விருந்து தொடர்பானது.

கைது செய்யப்பட்டவர்களிடம் இது தொடர்பாக விசாரணை நடைபெற்றுவருவதாக வான்கடே தெரிவித்துள்ளார்.

இந்த வழக்கில் பாரபட்சமற்ற விசாரணை நடக்கும் என்று என்.சி.பி. தலைவர் எஸ்.என்.பிரதான் தெரிவித்துள்ளார்.

குறிப்பாக பாலிவுட் நடிகர்கள் உள்ளிட்ட சில பணக்காரர்கள் தொடர்பு இதில் இருப்பதாகவும், அவர்கள் யாராக இருந்தாலும் சட்டத்துக்கு உட்பட்டு விசாரணை நடக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

என்ன நடந்தது?

‘கார்டெலியா` என்ற கப்பலில் போதைப் பொருள் பார்ட்டி ஒன்று நடைபெறுவதாக என்.சி.பி. அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்துள்ளது.

அந்த கப்பல் மும்பையிலிருந்து கோவாவிற்கு சென்று கொண்டிருந்தது. கப்பலுக்குள் அதிகாரிகள் சுற்றுலாப் பயணிகளை போல சென்றனர். கப்பல் பயணம் தொடங்கியவுடன் பார்ட்டி தொடங்கியுள்ளது.

ஞாயிறன்று காலை போதைப் பொருள் தடுப்பு பிரிவு இயக்குநர் சமீர் வாங்கடே, ஊடகங்களிடம் இதுகுறித்த தகவலை வெளியிட்டார்.இந்த பார்ட்டிக்கான கட்டணம் தலைக்கு 80 ஆயிரம் ரூபாய் என தெரியவந்திருப்பதாக சில ஊடகங்கள் கூறுகின்றன.

இந்த சம்பவம் பற்றி கூறிய மகாராஷ்டிர காங்கிரஸ் கமிட்டி பொதுச் செயலாளரும், செய்தித் தொடர்பாளருமான அதுல் லோந்தே, குஜராத்தில் பிடிக்கப்பட்ட போதைப் பொருள்களுக்கு என்ன ஆனது என்று கேட்டுள்ளார்.

Exit mobile version