சில தினங்களுக்கு முன்னர் வீட்டிலிருந்து காணாமல் போயிருந்த இரண்டரை வயது சிறுமியொருவர், சிலாபம்- இரணவில கடற்கரையிலிருந்து இன்று காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
நீர்கொழும்பு- துங்கால்ப்பிட்டிய பிரதேசத்தைச் சேர்ந்த குறித்த சிறுமி, 18ஆம் திகதி மாலை 5 மணியளவில் வீட்டிலிருந்து காணாமல் போயுள்ளதாக, அவரது பெற்றோர், துங்கால்பிட்டிய பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தனர்.
இதனையடுத்து சிறுமியைத் தேடும் நடவடிக்கையில் இரகசியப் பொலிஸாரும் ஈடுபட்ட நிலையில், சிறுமி கண்டுபிடிக்கப்படவில்லை.
அச்சிறுமி காணாமல் போன போது, வெள்ளை நிற டீசேர்டும் கட்டை காற்சட்டையும் அணிந்திருந்த நிலையில், இன்று சடலமாக மீட்கப்பட்ட சடலத்தில் வெள்ளை நிற டீசேட் காணப்பட்ட போதும் அவரது உடலில் காற்சட்டையோ உள்ளாடையோ காணப்படவில்லை என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
மேலும் சடலம் அடையாளம் காணப்பட முடியாத வகையில் உள்ளதுடன், உடலில் சில பகுதிகளும் காணாமல் போயிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.