தாய்வானை பாதுகாப்பதில் எமக்கு அர்ப்பணிப்பு உள்ளது எனத் தெரிவித்துள்ள ஜனாதிபதி ஜோ பைடன், சீனா தாக்கினால் தாய்வானை அமெரிக்கா பாதுகாக்கும் என்றும் கூறியுள்ளார்.

 

சி.என்.என். டவுன் ஹாலில் வியாழக்கிழமை நடைபெற்ற நேரடி உரையாடலின்போது, தாய்வானை பாதுகாப்பதாக உறுதியளிக்க முடியுமா என்று கேள்வி அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனிடம் தொகுப்பாளரினால் எழுப்பப்பட்டது.

அதற்கு பதிலளித்த அவர், ஆம், நான் சீனாவுடனான பனிப்போரை விரும்பவில்லை – நாங்கள் பின்வாங்கப் போவதில்லை என்பதை சீனாவுக்குப் புரியவைக்க விரும்புகிறேன், நாங்கள் எங்கள் கருத்துக்களை மாற்றப்போவதில்லை” என்று பைடன் சி.என்.என்னின் பால்டிமோர் நகர்  தொகுப்பாளர் ஆண்டர்சன் கூப்பரிடம் கூறினார்.

சீனா, தாய்வானை தாக்க முயன்றால் பாதுகாப்புக்கு அமெரிக்கா வருமா என்று கேள்வி எழுப்பட்டபோது, “ஆம், அதைச் செய்ய எங்களுக்கு ஒரு அர்ப்பணிப்பு உள்ளது.” என்று அழுத்தமாக தெரிவித்தார்.

சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் தனது மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்திற்கு எதிராக இராஜதந்திர மற்றும் இராணுவ அழுத்தத்தை அதிகரிப்பதால் தாய்வானை பாதுகாப்பதற்கான அமெரிக்க உறுதிப்பாட்டை தெளிவுபடுத்தும் வகையில் பைடன் நிர்வாகம் அதிகரித்து வரும் அழைப்புகளை எதிர்கொண்டுள்ளது.

பீஜிங், தாய்வானை சீனாவின் ஒரு பகுதியாகக் கருதுகிறது மற்றும் தீவை தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவர இராணுவப் படையைப் பயன்படுத்துவதற்கான உரிமையை பாதுகாத்து வருகிறது.