நபர் ஒருவர் தன்னை மனைவியிடம் இருந்து காப்பாற்றிச் சிறையில் அடைக்குமாறு பொலிஸாரிடம் கோரிக்கை விடுத்துள்ள விநோத சம்பவம் இத்தாலியில் இடம்பெற்றுள்ளது.
இத்தாலியின் ரோம் நகரை ஒட்டிய கைடோனியா மாண்டெசெலியோ எனும் நகரில் வசித்துவரும் 30 வயதான நபர் ஒருவரே இவ்வாறு பொலிஸ் நிலையதில் தெரிவித்துள்ளார்.
விசாரணையின் போது குறித்த நபர் போதைப் பொருள் தொடர்பான குற்றத்துக்காகப் பல மாதங்களாக வீட்டுச் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் எனத் தெரியவந்துள்ளது.
எனினும் , தண்டனைக் காலம் முடிவதற்கு மேலும் பல ஆண்டுகள் உள்ள நிலையில் வீட்டில் இருந்து திடீரென தப்பித்து பொலிஸ் நிலையத்துக்கு வந்த அவர் ” இனிமேலும் என்னால் வீட்டில் இருக்க முடியாது, என்னுடைய மனைவியின் கொடுமையை என்னால் சகித்துக் கொள்ள முடியவில்லை. வீடு எனக்கு நரகம் போல உள்ளது.
தயவு செய்து என்னைச் சிறையில் அடைத்து விடுங்கள் என்னுடைய தண்டனைக் காலத்தை நான் சிறையிலேயே கழிக்கிறேன்” எனக் கோரிக்கை விடுத்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் குறித்த நபரின் வேண்டுதலை நீதிமன்றம் ஏற்றுக் கொண்டு அவரைச் சிறையில் அடைத்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.