விழுப்புரம் விக்கிரவாண்டி ஒன்றியத்திற்கு உட்பட்ட நரசிங்கனூர் கிராமம் உள்ளது. நரசிங்கனூர் கிராமத்திற்கு செல்லும் வழியிலும், கிராமத்தை சுற்றிலும் பனைமரங்கள் அதிகமாக காணப்படுகின்றன.
அந்த கிராமத்தில் பனையேறியாக இருப்பவர் பாண்டியன். இவருடைய குடும்பத்தாருடன் இணைந்து பனைமரம் மூலம் பதநீர் இறக்குதல், கருப்பட்டி, பனங்கற்கண்டு செய்வது, விதைகளை நட்டு அதை பராமரித்து வருவது, பனை சார்ந்த மதிப்பு கூட்டு பொருள் தயார் செய்வது உள்ளிட்ட வேலையை செய்து வருகின்றனர்.
பனைமரங்களும், பனையேறிகளும் குறைந்து வருவதால், பனைமரத்தின் முக்கியத்துவம் மற்றும் பனை பொருளாதாரத்தை அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்லும் முயற்சியில் பனையேறி பாண்டியன் அவரது இரண்டு பெண் பிள்ளைகளுக்கு பனை விவசாயத்தின் முக்கியத்துவத்தை கற்பித்துள்ளார்.
அதன் காரணமாக பனையேறி பாண்டியனின் இரண்டு மகள்களுக்கும் பள்ளி படித்துக்கொண்டே தந்தையை போன்று பனை விவசாயத்திலும் கவனம் செலுத்தி வருகின்றனர்.
அதிலும் 9ஆம் வகுப்பு பயிலும் இரண்டாவது மகள் கரிஷ்மா தந்தை போன்று வேகமாக பனைமரம் ஏறுவது, பதநீர் இறக்குவது, மரத்தை சீவி விடுவது உள்ளிட்ட வேலைகளை சகஜமாக செய்து வருகிறார்.
சிறுமியின் இந்த முயற்சி நரசிங்கனூர் கிராமம் மட்டுமின்றி விழுப்புரம் மாவட்டம் முழுவதிலும் அனைவரின் கவனத்தை ஈர்த்துள்ளது.
காணொளி தயாரிப்பு: நடராஜன் சுந்தர்