அப்போதைய மெட்ராஸ் ஸ்டேட்டில் இருந்து பிறமொழி பேசும் பகுதிகள் பிரிந்து சென்ற நவம்பர் 1ம் தேதியை தமிழ்நாடு நாள் என்று 2019ல் அதிமுக அரசு அறிவித்தது.
இனி 1967 ஜூலை 18ம் தேதி மெட்ராஸ் ஸ்டேட்டுக்கு தமிழ்நாடு என்று அண்ணா பெயர் சூட்டிய நாள்தான் தமிழ்நாடு நாள் என்று கொண்டாடப்படும் என்று தற்போது முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
இதற்கு ஆதரவாகவும் எதிராகவும் வாதங்கள் வைக்கப்பட்டு இது ஒரு சர்ச்சையாகியுள்ளது.
இதன் பின்னணி என்ன?
இந்திய நாடு சுதந்திரம் பெற்ற பிறகு நாடு முழுவதும் எழுந்த போராட்டங்களைத் தொடர்ந்து 1956 நவம்பர் 1 ஆம் தேதி மொழிவாரி மாநிலங்கள் உருவாக்கப்பட்டன.
இதனால் ஒன்பது மாநிலங்களாக இருந்த இந்தியா, 14 மாநிலங்களாகவும் 6 யூனியன் பிரதேசங்களாகவும் பிரிக்கப்பட்டது.
அதுவரையில், சென்னை மாகாணத்துக்குள் இருந்த தெலுங்கு, கன்னடம், மலையாளம் பேசும் மக்கள் பெரும்பான்மையாக இருந்த பகுதிகள் தனித்தனியாக பிரிக்கப்பட்டு அம்மொழிகள் பேசும் மக்கள் வசித்த பிற நிலப்பகுதிகளோடு இணைக்கப்பட்டு ஆந்திரப்பிரசேம், கர்நாடகம், கேரளம் என்ற மாநிலங்கள் உருவாயின.
தமிழ்பேசும் மக்கள் பெரும்பான்மையாக இருந்த பகுதி சென்னை மாகாணமாகவே நீடித்தது.
1967 ஜூலை 18ம் தேதி அண்ணா தலைமையிலான முதல் திமுக அரசு மாநில சட்டமன்றத்தில் சென்னை மாகாணத்துக்கு தமிழ்நாடு என்று பெயர்சூட்டி தீர்மானம் நிறைவேற்றியது.
தமிழ்நாடு சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
சில பெரியாரிய, தமிழ்தேசிய அமைப்புகள் நவம்பர் 1ம் தேதி அன்று சிறிது காலம் தமிழகப் பெருவிழா என்ற ஒரு விழாவை சென்னையில் நடத்திவந்தன.
இந்நிலையில், அதிமுக அரசு அந்த நாளை தமிழ்நாடு நாள் என்று அறிவித்தது.
ஸ்டாலின் சொன்ன காரணம்
இந்நிலையில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த சனிக்கிழமை வெளியிட்ட அறிவிப்பு ஒன்று விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
அவர் தனது அறிக்கையில், ` 1956 ஆம் ஆண்டு நவம்பர் 1 ஆம் தேதி இந்தியா முழுவதும் மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்டன.
அதன் அடிப்படையில் அப்போதைய மெட்ராஸ் மாகாணத்திலிருந்து ஆந்திரா, கர்நாடகா மற்றும் கேரளத்தின் சில பகுதிகள் பிரிந்து சென்றன.
2019 ஆம் ஆண்டு முதல் நவம்பர் 1 ஆம் தேதியை தமிழ்நாடு மாநில நாளாக அப்போதைய அரசு அறிவித்திருந்தது.
காமராஜர் அறிஞர் அண்ணா
இந்நிலையில், பல்வேறு அரசியல் கட்சிகள், தமிழ் உணர்வாளர்கள், தமிழ்க் கூட்டமைப்பினர், தமிழ் அறிஞர்கள் என பல தரப்பிலும் நவம்பர் 1 ஆம் நாள் எல்லை போராட்டத்தினை நினைவுக்கூறும் நாளாகத்தான் அமையுமே தவிர தமிழ்நாடு நாளாக கொண்டாடுவது பொருத்தமாக இருக்காது என்றும் மெட்ராஸ் மாகாணம் என்று இருந்ததை மாற்றி அண்ணாவால் 1968 ஆம் ஆண்டு ஜூலை 18 ஆம் நாள் சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி, தமிழ்நாடு என்று பெயரிடப்பட்ட அந்த நாள்தான் தமிழ்நாடு நாளாக கொண்டாடப்பட வேண்டும் என்றும் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.
இதனை ஏற்று, ஜூலை 18 ஆம் தேதியை தமிழ்நாடு நாளாக இனி கொண்டாட அரசாணை விரைவில் வெளியிடப்படும்’ எனக் குறிப்பிட்டிருந்தார்.
இதே கருத்தை வலியுறுத்திப் பேசியுள்ள திராவிட இயக்கத் தமிழர் பேரவையின் பொதுச் செயலாளர் சுப.வீரபாண்டியன், ` மாநில மறுசீரமைப்புக் குழுவின் அறிக்கையின்படி, அன்றைய இந்திய அரசு 1956 நவம்பர் 1 ஆம் நாளை இந்தியாவை பல்வேறு மொழிவாரி மாநிலங்களாகப் பிரித்தது.
அதன் அடிப்படையில் முந்தைய தமிழ்நாடு அரசு நவம்பர் 1 ஆம் தேதியை தமிழ்நாடு நாள் என அறிவித்தது’ என்கிறார்.
கொண்டாடுவதற்கு ஒன்றுமில்லை
` 1956 நவம்பர் 1 ஆம் நாள் உருவாக்கப்பட்ட மொழிவாரி மாநில அமைப்பை ஏற்கிறோம். அது சரியான முடிவே. எனினும் அந்த நாளில் தமிழ்நாடு பெற்றதைவிட இழந்ததே அதிகம்.
பழைய சென்னை மாகாணம் இன்றுள்ள தமிழ்நாட்டைவிட மிகவும் விரிந்து பரந்தது. இன்று கேரளா, ஆந்திரா, கர்நாடகம் ஆகிய மாநிலங்களில் உள்ள பல பகுதிகள் அன்று சென்னை மாகாணத்தில் இருந்தன.
இன்றைய ஒடிஷா மாநிலம் கஞ்சம் மாவட்டத்தின் ஒருபகுதிகூட அன்று நம்முடன் இருந்தது. எல்லைகள் பிரிக்கப்பட்டபோது, நம் மண்ணின் பல பகுதிகளை அண்டை மாநிலங்களிடம் நாம் இழந்துவிட்டோம் என்பதால் அந்த நாளைக் கொண்டாடுவதற்கு ஒன்றுமில்லை என்பதே உண்மை’ என்கிறார் சுப.வீரபாண்டியன்.
தமிழ்நாடு அரசின் முடிவுக்கு எதிராகக் கருத்து தெரிவித்துள்ள பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மருத்துவர் ராமதாஸ், “ தமிழ்நாடு என்ற பெயரில் இப்போது அழைக்கப்படும் நிலப்பரப்பு மட்டுமே புதிய சென்னை மாகாணமாக 1956-இல் அறிவிக்கப்பட்டது.
அதன்பின் 11 ஆண்டுகள் கழித்து, 1967 ஆம் ஆண்டுதான் சென்னை மாகாணத்திற்கு தமிழ்நாடு என்று பெயர் சூட்டுவதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
ஒன்றரை ஆண்டுகளுக்குப் பிறகு அது நடைமுறைக்கு வந்தது. இந்த இரண்டும் வெவ்வேறு நடைமுறைகள்.
தமிழ்நாட்டின் இன்றைய நிலப்பரப்பைக் கொண்ட புதிய மாநிலம் பிறந்தநாள் நவம்பர் 1 ஆம் தேதி.
அதற்கு தமிழ்நாடு என்று பெயர் சூட்டப்பட்ட நாள் 1969 ஜனவரி 14 ஆம் தேதி. இரண்டுக்கும் நடுவே சென்னை மாகாணத்துக்கு தமிழ்நாடு என பெயர் சூட்டலாம் என்று கோரிக்கை வைக்கப்பட்ட நாள் 1967 ஜூலை 18 ஆம் தேதி. ஒரு மாநிலம் பிறந்த நாளைத்தான் அம்மாநில நாளாக கொண்டாட முடியும். பெயர் சூட்டப்பட்ட நாளையோ, ஒரு குறிப்பிட்ட பெயரைச் சூட்டலாம் என்று கோரிக்கை வைக்கப்பட்ட நாளையோ பிறந்தநாளாக கொண்டாட முடியாது. இது பின்னாளில் தேவையற்ற சர்ச்சைகளை ஏற்படுத்தும். அதை தமிழ்நாடு அரசு தவிர்க்க வேண்டும்” என்கிறார்.
மேலும், ` இன்றைய தமிழ்நாடு மாநிலம் தோற்றுவிக்கப்பட்டு 66 ஆண்டுகள் ஆகின்றன. தமிழ்நாடு என்று பெயர் சூட்டப்பட்டு 52 ஆண்டுகள் ஆகின்றன. முதல்வர் கூறுவதைப் போன்று தமிழ்நாடு என்று பெயர் சூட்டுவதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டு 54 ஆண்டுகள் ஆகின்றன.
தமிழ்நாட்டின் வயது என்ன என்று வினா எழுப்பட்டால், அதற்கான விடை எது? என்ற குழப்பம் ஏற்படும். இத்தகைய குழப்பங்கள் தேவையற்றவை. சென்னை மாகாணத்திலிருந்து பிரிக்கப்பட்ட மாநிலங்களின் அரசுகள் ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 1 ஆம் தேதியை, தங்கள் மாநிலம் உருவாக்கப்பட்ட நாளாக கொண்டாடி வருகின்றன.
அதேபோல், தமிழ்நாடும் நவம்பர் 1 ஆம் தேதியை தமிழ்நாடு நாளாக கொண்டாட வேண்டும்’ என்கிறார், மருத்துவர் ராமதாஸ்.
ஓ.பி.எஸ். விமர்சனம்
இதுதொடர்பாக, அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிவிப்பிலும், ` ஓர் அலுவலகமோ, கட்டடமோ முழுவதுமாக முடிக்கப்பட்டு என்றைக்குத் திறந்து வைக்கப்படுகிறதோ அந்த நாள்தான் தோன்றிய நாளாக கருதப்படுமே தவிர, திட்ட அறிக்கை தயார் செய்தது, நிர்வாக அனுமதி அளித்தது, நிதி ஒதுக்கீடு செய்தது, அடிக்கல் நாட்டியது ஆகியவற்றை எல்லாம் அந்த அலுவலகமோ, கட்டடமோ தோன்றிய நாளாக கருத முடியாது. எனவே, `ஜூலை 18-ம் நாள் தமிழ்நாடு நாள்’ என்ற அறிவிப்பு நியாயமற்றதாக இருக்கிறது’ என்கிறார்.
தொடர்ந்து, ` ஒரு குழந்தை பிறந்தவுடன் அதற்குப் பெயர் வைக்கப்படுகிறது. பத்து வருடங்கள் கழித்து அந்தக் குழந்தையின் பெயர் மாற்றப்பட்டு அரசிதழில் வெளியிடப்பட்டாலும், அந்தக் குழந்தையின் பிறந்தநாள் என்பது அந்தக் குழந்தை என்று பிறந்ததோ அந்த நாளில்தான் கொண்டாடப்படுமே தவிர, பெயர் மாற்றம் செய்த நாளில் கொண்டாடப்படமாட்டாது’ எனக் கூறியுள்ளார்.
‘அதிர்ச்சியை ஏற்படுத்திய அறிவிப்பு’
`எது தமிழ்நாடு நாள்?’ என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் வன்னி அரசுவிடம் பிபிசி தமிழுக்காக பேசினோம்.
“ 1967 ஜூலை 18 ஆம் தேதி என்பது `தமிழ்நாடு’ என்ற பெயரை சூட்டக் கோரி சட்டப்பேரவையில் தீர்மானம் இயற்றப்பட்ட நாளாக உள்ளது. அதைத்தான் `தமிழ்நாடு நாள்’ என அரசு அறிவித்துள்ளது.
ஆனால், இதற்கு முன்பு 1956 நவம்பர் 1 அன்று மொழிவாரியாக மாநிலம் பிரிந்த நாளைத்தான், `தமிழ்நாடு நாள்’ என்று கொண்டாடி வந்தார்கள்.
அண்ணா
`தமிழகப் பெருவிழா’ என்ற பெயரில் சுப.வீரபாண்டியன் போன்றவர்கள் இந்த நிகழ்வை முன்னெடுத்தனர். அது காலத்தின் கட்டாயமாகவும் மொழிவழி மாநிலம் அமைந்ததை உறுதி செய்யும் வகையிலும் இந்த நிகழ்வுகள் அமைந்தன.
இப்போது திடீரென தமிழ்நாடு அரசு, ஜூலை 18 அன்று அண்ணா தீர்மானம் இயற்றிய நாளை, `தமிழ்நாடு நாள்’ என அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு, தமிழ் அறிஞர்கள், பெரியாரிய உணர்வாளர்கள் ஆகியோர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது” என்கிறார்.
தொடர்ந்து பேசிய வன்னி அரசு, “ தமிழ்நாடு நாள் தொடர்பாக, அனைத்து தரப்பிலும் அரசு ஆலோசனை செய்திருக்கலாம் எனத் தோன்றுகிறது. ஏனென்றால், இது மிகவும் முக்கியமான நாள்.
அதேநேரம், சென்னை மாகாணமாக இருந்ததை `தமிழ்நாடு’ எனப் பெயர் சூட்டி தீர்மானம் நிறைவேற்றிய ஜூலை 18 என்பதும் முக்கியமான நாள்தான். இதற்கு முன்பு இதே தீர்மானம் சட்டசபையில் நான்கு முறை தோற்கடிக்கப்பட்டுள்ளது.
தி.மு.க அரசு ஆட்சிக்கு வந்த பிறகு அதனை சட்டவடிவமாக்கி அனுப்பினர். அந்த நாளும், முக்கியமான நாள் என்பதில் மாற்றுக் கருத்தில்லை.
ஆனால், இவ்வளவு காலமாக நவம்பர் 1 என்ற தேதியை வி.சி.க, ம.தி.மு.க, தமிழ்த்தேசிய இயக்கங்கள் ஆகியவை தமிழ்நாடு நாளாக முன்னெடுத்து வருகின்றன. இப்படியொரு அறிவிப்பை அரசு வெளியிடுவதற்கு முன்னதாக விவாதித்திருக்கலாம். தமிழ்நாடு என்ற பெயரை சூட்டுவதைவிடவும் மொழிவழி மாநிலம் பிரிந்த நாள் மிகவும் முக்கியமானது” என்கிறார்.
மு.க.ஸ்டாலின்
“இந்திய விடுதலைக்குப் பிறகு சுதந்திர இந்தியா சந்தித்த மிக முக்கியமான பிரச்னை, மொழிவாரியாக மாநிலங்களைப் பிரித்ததுதான். இதற்காக, 1948 ஆம் ஆண்டு எஸ்.கே.தார் ஆணையம் அமைக்கப்பட்டது.
அந்த ஆணையம், `மொழிவழியாக மாநிலங்களைப் பிரிக்கலாமா?’ எனப் பல்வேறு மாநிலங்களில் ஆய்வு செய்துவிட்டு, நேருவிடம் அறிக்கையை சமர்ப்பித்தது. அந்த அறிக்கையில், `மொழிவழியாக மாநிலங்களைப் பிரிக்கக் கூடாது, எல்லைரீதியாக பிரிக்கலாம்’ எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.
நவம்பர் 1 முக்கியமான நாள் ஏன்?
இதன்பின்னர், ஜே.வி.பி கமிட்டி (ஜவஹர்லால் நேரு, வல்லபாய் படேல், பட்டாபி சீத்தாராமையா) இணைந்து மொழிவழியாக பிரிப்பது தொடர்பாக கருத்துகளைக் கேட்டனர். இதையடுத்து பசல் அலி தலைமையில் மாநில மறுசீரமைப்புக்கு குழு என்ற ஒன்றை உருவாக்கி, மொழிவழியாக 14 மாநிலங்களையும் 6 யூனியன் பிரதேசங்களையும் வரையறை செய்தனர். எனவே, மொழிவாரியாக மாநிலங்கள் பிரிக்கப்பட்ட நாள் என்பது நவம்பர் 1 ஆம் தேதி,” என்கிறார் வன்னி அரசு.
மேலும், “ 2010 டிசம்பர் 26 ஆம் தேதி தமிழர் இறையாண்மை மாநாடு ஒன்றை விடுதலைச் சிறுத்தைகள் கட்சி முன்னெடுத்தது. அப்போது தனிக்கொடி கேட்டு தீர்மானம் நிறைவேற்றினோம். அப்போது, தமிழர் இறையாண்மை நாளாக நவம்பர் 1 ஆம் தேதியை கொண்டாட வேண்டும் என நாங்கள் வலியுறுத்தினோம்” என்கிறார் அவர்.