கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட இரத்தினபுரம் பகுதியில் பாழடைந்த கிணற்றிலிருந்து மீட்கப்பட்ட இளைஞனின் கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபரை, கிளிநொச்சி பொலிஸார், இன்று (02) கைது செய்துள்ளனர்.
கடந்த 15.08.2021 அன்று, அப்பகுதியில் பயன்பாடற்று கிடந்த கிணற்றில் பாய் ஒன்றினால் சுற்றப்பட்ட நிலையில் சடலம் காணப்படுவது தொடர்பில் காணியின் உரிமையாளர் அவதானித்து, பொலிஸாருக்கு தகவல் வழங்கியிருந்தார்.
சம்பவத்தை அடுத்து, கிளிநொச்சி குற்ற விசாரணை பிரிவின் உப பொலிஸ் பரிசோதகர் கருணாரட்ணம் ஜெசிந்தன் உள்ளிட்ட பொலிஸ் குழுவினர் விசாரணை மேற்கொண்டிருந்தனர்.
குறித்த கிணற்றை அண்மித்த பகுதுயில் காணப்பட்ட குற்றச்செயலுடன் தொடர்புடைய சான்றுகள் மற்றும் சாட்சியங்களை விசாரணை மேற்கொண்டதை அடுத்து உயிரிழந்த இளைஞன் கொலை செய்யப்பட்டுள்ளமை உறுதி செய்யப்பட்டிருந்தது.
இந்த நிலையில், குறித்த குற்றச்செயலுடன் தொடர்புடைய சந்தேகநபரை, இன்று பொலிஸார் கைது செய்துள்ளனர் என கிளிநொச்சி பொலிஸார் தெரிவித்தனர்.
இந்தக் குற்றச்செயல் தொடர்பில் விசாரணைக்காக நியமிக்கப்பட்ட கிளிநொச்சி குற்ற விசாரணை பிரிவின் உப பொலிஸ் பரிசோதகர் கருணாரட்ணம் ஜெசிந்தன் தலைமையிலான குழுவினரே சந்தேக நபரை கைது செய்துள்ளனர்.
சந்தேக நபர், இரத்தினபுரம் பகுதியை சேர்ந்த 27 வயதுடைய இளைஞன் எனவும், உயிரிழந்தவருக்கும், சந்தேகநபருக்கும் இடையில் ஏற்பட்ட திடீர் முரண்பாடு காரணமாக இக்கொலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளின் பின்னர் கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிமன்றில் சந்தேகநபருக்கு எதிராக வழக்கு விசாரணை தொடர்ந்தும் முன்னெடுக்கப்படவுள்ளது.