இறக்குமதி செய்யப்படும் பால்மா,சமையல் எரிவாயு,கோதுமை மா மற்றும் சீமெந்து ஆகிய பொருட்கள் மீது விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாட்டு விலை கடந்த ஒக்டோபர் மாதம் நீக்கப்பட்டதை தொடர்ந்து 50 கிலோகிராம் நிறையுடைய சீமெந்து பெக்கெட்டின் விலை 93 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டது.
அவ்வாறான நிலையில் 1093 ரூபாவாக காணப்பட்ட சீமெந்து பெக்கெட்டின் விலை 1275 ரூபா வரை 30 நாட்களுக்குள் அதிகரிக்கப்பட்டுள்ளது.
சீமெந்தினை அடிப்படையாகக் கொண்ட உற்பத்திகளுக்காக தேசிய மட்டத்தில் உற்பத்தி செய்யப்படும் சீமெந்து போதுமானதாக காணப்படவில்லை.இதன் காரணமாக இறக்குமதி செய்யப்படும் சீமெந்திற்கு அதிக கேள்வி நிலவியது.
கொவிட் தாக்கம்,உற்பத்தி மற்றும் போக்குவரத்து சேவை உள்ளிட்ட பல காரணிகளினால் சீமெந்து இறக்குமதியில் பெரும் நெருக்கடி நிலை காணப்பட்டது.
இவ்வாறான நிலையில் சீமெந்து இறக்குமதியாளர்கள் நிதியமைச்சுடன் கடந்த வாரம் பேச்சுவார்த்தையில் ஈடுப்பட்டார்கள்.ஒரு சில நிபந்தனைகளுக்கு அமைய சீமெந்து இறக்குமதி செய்ய தீர்மானிக்கப்பட்டது.
விலை அதிகரிக்காமல் சீமெந்து இறக்குமதியாளர்களுக்கு நிவாரணம் வழங்கும் திட்டம் செயற்படுத்தப்படவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவன்ன குறிப்பிட்டார்.
அவ்வாறான நிலையில் நேற்று முதல் அமுலுக்கு வரும் வகையில் சீமெந்தின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது.