மதுரை ,பெருங்குடி பகுதியை சேர்ந்தவர் காமராஜ் மற்றும் நண்பன் அஜித் கண்ணன் ஆகியோர், தங்களது நண்பர்கள் 18 பேருடன் சேர்ந்து 10 மோட்டார் சைக்கிள்களில் கடந்த 5 ஆம் திகதி கொடைக்கானலுக்கு சுற்றுலா சென்றனர். பின்னர்,நேற்றுக் காலை அவர்கள் மீண்டும் மோட்டார் சைக்கிள்களில் மதுரை நோக்கி புறப்பட்டனர்.
நிலக்கோட்டை அருகே காமராஜ், அஜித்கண்ணன் ஆகியோர் மோட்டார் சைக்கிளில் வந்தனர். மோட்டார் சைக்கிளை காமராஜ் ஓட்டினார்.
சிவன்கோவில் பகுதியில் வந்தபோது, அங்குள்ள வீதிவளைவில் எதிரே வந்த காரும், மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் மோட்டார் சைக்கிள் அப்பளம் போல நொறுங்கியது.
கண் இமைக்கும் நேரத்தில் நடந்த இந்த கோர விபத்தில் சினிமாவை மிஞ்சும் காட்சியை போல் மோட்டார் சைக்கிளில் இருந்து 2 பேரும் தூக்கி வீசப்பட்டனர். இதில் அஜித்கண்ணன் வீதியின் குறுக்கே சென்ற மின்கம்பி மீது பறந்து போய் விழுந்தார்.
மின்கம்பியில் தொங்கியபடி கிடந்த அஜித்கண்ணன் மீது மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே பலியானார். இதேபோல் விபத்தில் சிக்கி, வீதியோரத்தில் போய் விழுந்த காமராஜ் படுகாயம் அடைந்து பின்னர்,பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்த சம்பவம் நடந்த சிறிது நேரத்தில், அவர்களை பின்தொடர்ந்து மோட்டார் சைக்கிள்களில் வந்த சக நண்பர்கள் விபத்தை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.