சீரற்ற கால நிலை காரணமாக நாட்டில் ஏற்பட்டிருந்த அனர்த்த நிலைமை தற்போது படிப் படியாக நீங்கி வருவதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்தது.
வியாழக்கிழமை (11) இரவு 7.00 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் நாடளாவிய ரீதியில் பதிவான மழை வீழ்ச்சியில் குறிப்பிடத்தக்க வீழ்ச்சி அவதானிக்கப்பட்டுள்ள நிலையில், வெள்ளத்தில் மூழ்கிய பகுதிகள் அனைத்தும் அந் நிலைமையிலிருந்து மீண்டு வருவதாக அந்த நிலையம் தெரிவித்தது.
எவ்வாறாயினும் அனர்த்தத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கான நிவாரணம் வழங்கும் பணிகள் எந்த தடைகளும் இன்றி தொடர்வதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் பணிப்பாளர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரால் சுதத்த ரனசிங்க தெரிவித்தார்.
கடந்த ஒக்டோபர் மாதம் 29 ஆம் திகதி இலங்கையில் ஆரம்பித்த சீரற்ற கால நிலையுடன் கூடிய நிலைமையால் இன்று மாலை வரை 17 மாவட்டங்களைச் சேர்ந்த 150 பிரதேச செயலக பிரிவுகளுக்கு உட்பட்ட 65 ஆயிரத்து 580 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. அக்குடும்பங்களில் உள்ள உறுப்பினர்களின் எண்ணிக்கை 2 இலட்சத்து 30 ஆயிரத்து 185 ஆகும். அனர்த்தங்கள் காரணமாக 26 பேர் உயிரிழந்துள்ளனர்.
பதுளை மவட்டத்தில் 4 உயிரிழப்புக்களும், மாத்தளையில் ஒன்றும், புத்தளத்தில் 7 உம், காலியில் ஒன்றும், கேகாலை மற்றும் குருணாகலில் தலா 6 உயிரிழப்புக்களும், முல்லைத்தீவில் ஒரு உயிரிழப்பும் அனர்த்தங்கள் காரணமாக பதிவானதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்தது.
இக்காலப்பகுதியில் அனர்த்தம் காரணமாக ( வெள்ளம்) அதிக பாதிப்புக்குள்ளான மாவட்டமாக புத்தளம் மாவட்டம் அடையாளம் காணப்பட்டுள்ளது.
அம்மாவட்டத்தில் மட்டும் 40333 குடும்பங்களைச் சேர்ந்த 139209 பேர் அனர்த்தங்களால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
யாழ் மாவட்டத்தில் 10261 குடும்பங்களைச் சேர்ந்த 34075 பேரும், மன்னார் மாவட்டத்தில் 4962 குடும்பங்களைச் சேர்ந்த 17846 பேரும் அனர்த்தங்களால் பாதிக்கப்பட்டுள்ளதாக அவ்வந்த மாவட்ட அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையங்களின் தகவல்கள் தெரிவித்தன.
அனர்த்தங்கள் காரணமாக பாதிக்கப்பட்டவர்களில் 3693 குடும்பங்களைச் சேர்ந்த 12349 பேர் 88 நலன்புரி நிலையங்களிலும் 13579 குடும்பங்கலைச் சேர்ந்த 50602 பேர் உறவினர்களின் வீடுகளிலும் தங்கியுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
அத்துடன் வெள்ளம், மண் சரிவு உள்ளிட்ட அனர்த்தங்களால் 39 வீடுகள் முற்றாகவும் 1390 வீடுகள் பகுதியலவிலும் சேதமடைந்துள்ளன.
இதனிடையே, இன்று முதல் மழையுடனான வானிலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்தது.
எனினும் மேல், சப்ரகமுவ, வடமேல் மற்றும் மத்திய மாகாணங்களிலும், காலி , மாத்தறை மாவட்டங்களிலும் நாளை (12) இடைக்கிடையே மழை பெய்யலாம் என திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
வட மத்திய, ஊவா மாகாணங்களிலும் அம்பாறை மாவட்டத்தின் சில பகுதிகளிலும் மாலை வேளையில் மழை பெய்யும் சாத்தியம் உள்ளதாகவும் வளிமண்டலவியல் திணைக்களம் மேலும் கூறியுள்ளது.
மழைவீழ்ச்சி குறைவடைந்துள்ளதால், ஆறுகளில் அதிகரித்திருந்த நீர் மட்டம் குறைவடைந்து வருவதாக நீர்ப்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது.
தொடர்ச்சியான மழையினால், நாட்டில் நிரம்பி வழிந்த நீர்த்தேக்கங்கள் மற்றும் பெருக்கெடுத்த கங்கைகள் நேற்று முதல் படிப் படியாக வழமைக்கு திரும்பிவருவதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்தது.
அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் தகவல்கள் பிரகாரம் 90 வீதமான நீர்த்தேக்கங்கள், கங்கைகள், ஆறுகளின் நிலைமை வழமைக்கு திரும்பியுள்ளன.
எவ்வாறாயினும் பலத்த மழையினால் 11 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு அபாய எச்சரிக்கை தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டட ஆய்வு நிறுவகம் அறிவித்துள்ளது.
மண்சரிவு அபாயத்தினால் மூடப்பட்ட கொழும்பு – கண்டி பிரதான வீதியின் பஹல கடுகண்ணாவை பகுதி மறு அறிவித்தல் வரை தொடர்ந்து மூடப்ப்ட்டிருக்கும் என பொலிசார் நேற்று அறிவித்தனர்.
இதனால் மாற்று வீதிகளை பயன்படுத்துமாறு சாரதிகள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
மண்சரிவு அபாயம் காரணமாக, கண்டி -கொழும்பு பிரதான வீதியின் பஹல கடுகன்னாவ பகுதி நேற்று இரவு 10 மணி முதல் மூடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.