கைரேகை பதிவை வைத்து சிவசங்கர் பாபாவின் ரகசிய அறையை திறந்து சி.பி.சி.ஐ.டி. அதிகாரிகள் சோதனை நடத்த முடிவு செய்துள்ளனர்.
சென்னை:
சென்னை கேளம்பாக்கம் அருகே புதுப்பாக்கத்தில் உள்ள சுஷில்ஹரி இண்டர்நேஷனல் பள்ளியின் நிறுவனர் சிவசங்கர் பாபா (வயது 79). இவர் தனது பள்ளியில் படித்த மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இவர் மீது 3 மாணவிகள் கொடுத்த புகார்களின் பேரில் தனித்தனியாக போக்சோ சட்டத்தின் கீழ் 3 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
முதலில் தமிழ்நாடு போலீசார் விசாரித்த இந்த வழக்கு பின்னர் சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு மாற்றப்பட்டது. டெல்லியில் தலைமறைவாக இருந்த சிவசங்கர் பாபாவை சி.பி.சி.ஐ.டி போலீசார் கடந்த ஜூன் மாதம் 16-ந் தேதி கைது செய்தனர்.
சிறை
தற்போது சிவசங்கர் பாபா சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவர் தன்னை ஜாமீனில் விடுவிக்கக் கோரி செங்கல்பட்டு கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். ஆனால் அவரது ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டதால், தொடர்ந்து அவர் சிறையிலேயே உள்ளார்.
இந்த வழக்கில் சிவசங்கர் பாபாவின் அறையில் ஏற்கனவே நடத்தப்பட்ட சோதனையில் கணினி, லேப்டாப் உள்ளிட்ட முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன.
இந்த நிலையில் சிவசங்கர் பாபாவின் ரகசிய அறையை திறக்க சி.பி.சி.ஐ.டி. அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர். கைரேகை பதிவை வைத்து சிவசங்கர் பாபாவின் ரகசிய அறையை திறந்து சி.பி.சி.ஐ.டி. அதிகாரிகள் சோதனை நடத்த முடிவு செய்துள்ளனர்.