Site icon ilakkiyainfo

`பல பெண்களுடன் நெருக்கம்’ -திருமணம் முடிந்ததும் மாப்பிள்ளையை காவலர்களிடம் அழைத்து வந்த பெண் வீட்டார்

`மொபைல் போனில் தியாகராஜன் பல பெண்களுடன் ஒன்றாக இருக்கும் வீடியோ உள்ளது. அதனை ஆய்வு செய்து அவனால் பாதிக்கப்பட்ட பெண்களிடம் எழுதி வாங்கி கொண்டு தியாகராஜனையும் எச்சரித்து எங்க பெண்ணுடன் வாழ வைப்பதற்கான நடவடிக்கையினை எடுக்க வேண்டும்’ என்றனர்.

கும்பகோணம் துக்காம்பாளையத்தை சேர்ந்த வாலிபர் தியாகராஜன். இவர் பல இளம் பெண்களை காதல் வலையில் வீழ்த்தி, அவர்களை ஏமாற்றி பாலியல் ரீதியான தொந்தரவுகளை செய்து உல்லாசமாக இருந்து வந்துள்ளாராம்.

பெண்களுடன் ஒன்றாக இருக்கும் வீடியோக்கள், போட்டோக்கள்,வாட்ஸ் அப்பில் ஆபாசமாக அனுப்பிய மெசேஜ் எல்லாம் தியாகராஜனின் செல்போனில் இருந்திருக்கிறது.

இந்நிலையில் கும்பகோணம் நாகேஸ்வரன் கோயில் வடக்கு வீதியை சேர்ந்தவர் மாலதி (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவருடைய தாய் இறந்த விடவே, தந்தை வேறொரு பெண்ணை திருமணம் செய்து கொண்டு சென்று விட்டார்.

இதனால் தன்னுடைய அத்தை, மாமா வீட்டில் வளர்ந்து வந்த மாலதி கும்பகோணத்தில் உள்ள பந்தல் கான்டிராக்டரின் கடையில் வேலை பார்த்து வந்துள்ளார்.

மாலதி வேலை பார்த்த கடைக்கு தியாகராஜன் அடிக்கடி சென்று வர, இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டு, பின்னர் காதலாக மாறியது.

கடந்த நான்கு வருடங்களாக இருவரும் காதலிப்பதாக கூறப்படுகிறது. இதையடுத்து மாலதியை உயிருக்கு உயிராய் காதலிப்பதாக கூறி ஏமாற்றி பல முறை நெருக்கமாக இருந்து வந்திருக்கிறாராம் தியாகராஜன்.

 

இதனை தொடர்ந்து சென்னையில் வேலை கிடைத்து விட்டதாக கூறி சென்ற தியாகராஜன், அடிக்கடி வந்து மாலதியை சந்தித்து சென்றுள்ளார்.

இதே போல் கடந்த முறை தியாகராஜன் வந்த போது அவரின் செல்போனை ஏதேச்சையாக எடுத்து பார்த்துள்ளார் மாலதி. அதில் தியாகராஜன் பல பெண்களுடன் ஒன்றாக இருக்கும் போட்டோ, வீடியோ ஆகியவை இருந்துள்ளது.

அதே போல் பல பெண்களின் வாட்ஸ்அப்புக்கு தியாகராஜன் அனுப்பியுள்ள ஆபாச மெஸ்ஸேஜை பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளார்.

அப்போது தான், காதலிப்பதாக கூறி தன்னை போலவே பல பெண்களை தியாகராஜன் ஏமாற்றியது தெரிய வந்து வெடித்து கதறியிருக்கிறார்.

இது குறித்து தியாகராஜனிடம் கேட்டதற்கு, `ஒழுங்கா இரு இல்லன்னா… நீ என்னோட ஒண்ணா இருந்த வீடியோவை வெளியே விட்டுவேன்” என மிரட்டிவிட்டு சென்று விட்டார். காதல் என்ற பெயரில் தான் ஏமாற்றப்பட்டதை நினைத்து தவித்த மாலதி, தன்னை போல் எத்தனை பெண்கள் பாதிக்கப்பட்டிருப்பார்கள் என விம்மியிருக்கிறார்.

 

இதனை தொடர்ந்து தன்னை திருமணம் செய்து கொள்ள வலியுறுத்தி தியாகராஜனிடம் முறையிட்டுள்ளார் மாலதி. ஆனால் மாலதியை சந்திப்பதையே தவிர்த்து வந்துள்ளார்.

தியாகராஜனுடன் தான் ஒன்றாக இருக்கும் போட்டோவை சமூக வலை தளத்தில் வெளியிடுவேன் என கூறியதால் இதனை உறவினர்கள் யாரிடமும் கூறாமல் பயந்து கொண்டு இருந்துள்ளார் மாலதி.

பாலியல் வன்கொடுமை
இந்நிலையில் நேற்று மாலை மாலதியின் வீட்டில் யாரும் இல்லை என்பதை தெரிந்து கொண்டு தியாகராஜன் வீட்டிற்கு வந்துள்ளார்.

அவரிடம் சமாதானம் செய்வது போல் நடித்து பாலியல் ரீதியாக தொல்லை கொடுக்க தொடங்கியுள்ளார். அப்போது தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி அழுது புலம்பியிருக்கிறார் மாலதி. இந்நிலையில் வீட்டிற்கு வந்த மாலதியின் அத்தை, இதனை பார்த்து விட மாலதியிடம், நடந்தவற்றை கேட்டிருக்கிறார்.

இதனை தொடர்ந்து தன்னை காதலிப்பதாக ஏமாற்றி தன்னிடம் தவறாக நடந்து கொண்டதையும், தற்போது பல பெண்கள் கூட பழக்கம் வைத்து கொண்டு என்னை திருமணம் செய்யாமல் ஏமாற்றுவதையும் தன் அத்தையிடம் அழுது கொண்டே கூறியுள்ளார் மாலதி. இதையடுத்து தப்பி ஓட முயன்ற தியாகராஜனை அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் விரட்டிப் பிடித்து தர்ம அடி கொடுத்தனர்.

பின்னர் மாலதியின் உறவினர்கள் அருகே உள்ள முத்துமாரியம்மன் கோயிலில் மாலதிக்கும், தியாகராஜனுக்கும் திருமணம் செய்து வைக்க ஏற்பாடு செய்தனர்.

உடனடியாக தியாகராஜனுக்கு பட்டு வேட்டி சட்டை உடுத்த வைத்ததுடன் மாலதிக்கும் மணமகளுக்கான அலங்காரம் செய்து வைத்தனர். பின்னர் இருவரும் மாலை மாற்றி கொண்டதுடன் தியாகராஜன் மாலதி கழுத்தில் தாலி கட்டினார்.

இதையடுத்து உறவினர்கள் புதுமண தம்பதியான இருவரையும் கும்பகோணம் அனைத்து மகளிர் காவல்நிலையத்திற்கு அழைத்து சென்றனர்.

“தியாகராஜன் பல இளம் பெண்களை காதலிப்பதாக கூறி ஏமாற்றியுள்ளான். அவனது மொபைல் போனில் அவன் பல பெண்கள் உடன் ஒன்றாக இருக்கும் வீடியோ உள்ளது.

அதனை ஆய்வு செய்து அவனால் பாதிக்கப்பட்ட பெண்களிடம் எழுதி வாங்கி கொண்டு, தியாகராஜனையும் எச்சரித்து எங்க பெண்ணுடன் ஒழுங்காக வாழ்வதற்கான நடவடிக்கையினை எடுக்க வேண்டும்” என்றனர்.

செல்போனில் இருந்த ஆபாச வீடியோ, போட்டோ, தன்னிடம் தொடர்பில் இருந்த பெண்கள் மொபைல் போனுக்கு ஆபாசமாக அனுப்பிய மெசேஜ் ஆகிவற்றை பார்த்து போலீஸார் அதிர்ச்சியடைந்ததுடன் இது தொடர்பாக விசாரணை மேற்கொள்வதாக கூறி அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவத்தால் கும்பகோணம் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. போலீஸ் தரப்பில் கேட்டதற்கு புகாரின் பேரில் விசாரணை மேற்கொள்ளப்படுவதாக தெரிவித்தனர்.

Exit mobile version