குமரி மாவட்டத்தில் பெய்திருக்கும் தொடர் மழையால் ஒரு கிராமம் தனித்தீவாக மாறியிருக்கிறது.
மழையால் அணைகளில் இருந்து திறந்து விடப்பட்ட உபரிநீர் குமரி மாவட்டம் குழித்துறை அடுத்துள்ள முன்சிறை, பண்டாரம்பறம்பு உள்ளிட்ட கிராமங்களில் உள்ள வீடுகளுக்குள் சூழ்ந்துள்ளது.
பல கிராமங்களில் உள்ள முக்கிய சாலைகள் சேதமடைந்து கிராமங்கள் துண்டிக்கப்பட்டு தனித்தீவாக காட்சி அளிக்கிறது.
இதன் ஒரு பகுதியாக குழித்துறை அடுத்துள்ள முன்சிறை, பண்டாரம்பறம்பு உள்ளிட்ட கிராமங்களில் மக்கள் வசித்து வந்த 150க்கும் மேற்பட்ட வீடுகள் அனைத்திலும் வெள்ள நீர் புகுந்து இடுப்பளவு தண்ணீர் நிற்பதால் மக்கள் வீட்டை விட்டு வெளியே வர முடியாமல் மூன்று நாட்களுக்கு மேலாக வீட்டின் மாடிகளில் தஞ்சமடைந்துள்ளனர்.
வெள்ள நீர் வடியாததால் இக்கிராம மக்கள் தங்களது அதியாவசிய அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்துகொள்ள முடியாமல் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
கடந்த மூன்று நாட்களாக பாதிப்புக்குள்ளான மக்களை அரசு ஊழியர்கள், மாவட்ட நிர்வாக அதிகாரிகள், அரசியல்வாதிகள் என யாரும் நேரடியாக சந்திக்கவில்லை என அக்கிராம மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.