லண்டனின் தென்கிழக்கு பகுதியில் உள்ள வீடொன்று தீ பிடித்து எரிந்ததில் இரண்டு சிறுவர்கள் உட்பட இலங்கை தமிழ் குடும்பத்தை சேர்ந்த நால்வர் உயிரிழந்துள்ளனர்.
லண்டனில் தென்கிழக்கில் உள்ள ஹமில்டன் வீதி பெக்ஸ்லிஹீத்தில் பகுதியில் உள்ள வீடொன்றிலேயே குறித்த தீ பரவியுள்ளது.
குறித்த வீடு முழுமையாக தீயில் பாதிக்கப்பட்டுள்ளதுடன் வீட்டிற்குள் இருந்து அவலக்குரல்கள் கேட்டதாகவும் அதனை பார்த்த அயலவர்கள் தெரிவித்துள்ளனர்.
தீ பரவிய நிலையில், சம்பவ இடத்திற்கு சென்ற தீயணைப்பு வீரர்கள் முதலாவது மாடியிலிருந்து இரண்டு பெண்களையும் இரு குழந்தைகளையும் உயிருடன் மீட்டுள்ளனர்.
எனினும் அவர்கள் பின்னர் அந்த இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். உயிரிழந்தவர்களில் இரு கைக்குழந்தைகள் உள்ளடங்கியுள்ளதாக தீயணைப்பு வீரர்கள் தெரிவித்தனர்.
தீயணைப்பு படையினர் வருவதற்கு முன்னர் அந்த கட்டிடத்திலிருந்து ஜன்னல் வழியாக குதித்து நபரொருவர் உயிர் தப்பிய போதிலும் அவரது கால்கள் உடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக லண்டன் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
நேற்று இரவு 8.30 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. இதன்போது மனைவி தனது கைத்தொலைபேசி செயலிழப்பதற்கு முன்னதாக, கணவரை தொடர்பு கொண்டு தீப்பற்றியுள்ளதாக கதறியுள்ளார்.
இதனையடுத்து தீயணைப்பு வீரர்கள் விரைந்து செயற்பட்ட போதிலும் நால்வர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.
யோகன் தங்கவடிவேல் என்று அழைக்கப்படும் கணவர், தனது குடும்பத்தினரை இழந்த நிலையில், தீயில் கருகிய வீட்டின் முன்பாக கதறியழுது, சரிந்து விழுந்த காட்சிகள் அங்கிருந்த மக்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
யோகன் பணியிலிருந்த போது, அவரது மனைவியிடமிருந்து தொலைபேசி அழைப்பு வந்தது. மிகவும் பீதியடைந்த குரலில் அவர், ‘நெருப்பு… நெருப்பு’ என கத்தியுள்ளார். அத்துடன் தொலைபேசி அழைப்பு துண்டிக்கப்பட்டது.
குழந்தைகள் இருவரும் படுக்கையிலேயே உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது. மேலும், அவரது தாய் இலங்கை திரும்பவிருந்த நிலையில், அதற்கான தயார்ப்படுத்தல்களை மேற்கொண்டுள்ளார்.
இச் சம்பவத்தில் யாழ்ப்பாணம் அராலி வடக்கைச் சேர்ந்த திருகோணமலை மற்றும் லண்டனை வசிப்பிடமாகக் கொண்ட நாகரஜனி வசந்தராஜா மற்றும் அவரது மகள், இரண்டு பேரப்பிள்ளைகள் என நான்கு பேர் இவ்வாறு பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
அப்பகுதி மக்கள் மற்றும் உறவினர்கள் குறித்த வீட்டின் முன் மலர்கள் வைத்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.குறித்த வீட்டினை மூன்று மாதங்களுக்கு முன்னர் 425,000 பவுண்டுகளிற்கு வாங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தீவிபத்திற்கான காரணம் வெளியாகாத நிலையில், சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.