ilakkiyainfo

தமிழகம் முழுவதும் கனமழை- 10,500 பேர் முகாம்களில் தஞ்சம்

சாலையில் தேங்கி உள்ள மழை நீர்

தூத்துக்குடி மாவட்டத்தில் அதிகபட்சமாக 118.82 மில்லி மீட்டர் மழை பதிவாகி இருக்கிறது. இந்த ஆண்டு 70 சதவீதம் அளவுக்கு கூடுதலாக மழை பெய்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை:

தமிழகம் முழுவதும் நேற்று காலையில் இருந்து மழை பெய்து கொண்டே இருந்தது.

சென்னையிலும் விட்டு விட்டு மழை பெய்தது. நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி உள்ளிட்ட தென் மாவட்டங்களிலும், நாகப்பட்டினம், டெல்டா மாவட்டங்களிலும், திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களிலும் மழை வெளுத்து வாங்கியது.

இதன் காரணமாக தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது. அனைத்து மாவட்டங்களிலும் ஆயிரக்கணக்கான வீடுகளை வெள்ளம் சூழ்ந்தது.

இதனால் மாநிலம் முழுவதும் வெள்ளம் பாதித்த 12 மாவட்டங்களில் பலர் வீடுகளை காலி செய்துவிட்டு அருகில் உள்ள முகாம்களில் தஞ்சம் புகுந்துள்ளனர்.

நேற்று இரவு வரை 10,500 பேர் வரையில் முகாம்களுக்கு வந்துள்ளதாக நிவாரண முகாம்களில் உள்ள அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த எண்ணிக்கை இன்று மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக அவர்கள் தெரிவித்தனர்.

சாலைகளில் மழை நீர்

நேற்று பெய்த கனமழைக்கு மாநிலம் முழுவதும் 5 பேர் உயிரிழந்துள்ளனர். 18 கால்நடைகள் வெள்ளத்தில் சிக்கி பலியாகி உள்ளன.

மழை காரணமாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை சென்னை உள்ளிட்ட 12 மாவட்டங்களில் முற்றிலுமாக முடங்கி உள்ளது.

தூத்துக்குடி மாவட்டத்தில் அதிகபட்சமாக 118.82 மில்லி மீட்டர் மழை பதிவாகி இருக்கிறது. இந்த ஆண்டு 70 சதவீதம் அளவுக்கு கூடுதலாக மழை பெய்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்த மழை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது எனவும் வானிலை ஆய்வு மைய அதிகாரி கூறியுள்ளார்.

Exit mobile version