யாழ்ப்பாணம் – மட்டுவில் வடக்கு பகுதியில் பிறந்து ஒரு நாளேயான சிசுவை உயிருடன் புதைத்தமை தொடர்பில் சிசுவின் தாய் கைது செய்யப்பட்டுள்ளார்.
கொரோனா தொற்றுக்குள்ளாகி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், குறித்த தாய் இன்று கைது செய்யப்பட்டதாக பொலிஸார் கூறினர்.
அவரை சாவகச்சேரி நீதவான் முன்னிலையில் நாளை (03) ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்டுள்ள பெண்ணின் தாய் கொரோனா தொற்றுக்குள்ளாகி வட்டுக்கோட்டை சிகிச்சை முகாமில் சிகிச்சை பெறுவதாகவும், சிகிச்சைகளின் பின்னர் அவரையும் கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் கூறினர்.
மட்டுவில் வடக்கு பகுதியில் கடந்த நவம்பர் மாதம் 23 ஆம் திகதி பிரசவத்திற்கு பின்னர், தாயினால் வீட்டின் பின்புறத்தில் சிசு புதைக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கிராம உத்தியோகத்தரால் வழங்கப்பட்ட முறைப்பாட்டிற்கு அமைய, சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டதுடன், புதைக்கப்பட்ட சிசு பாதுகாப்பாக மீட்கப்பட்டது.
மீட்கப்பட்ட பெண் சிசு, யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் சாவகச்சேரி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.