சுவிட்சர்லாந்தில் நாட்டில் வலி இல்லாமல் தற்கொலை செய்து கொள்ள டாக்டர் டெத் என்ற காப்சியூலை தனியார் நிறுவனம் வடிவமைத்துள்ளது. இதற்கு அந்நாட்டு அரசு ஒப்புதலையும் வழங்கியுள்ளது.
இந்தியா உட்பட உலகின் பல்வேறு நாடுகளிலும் தற்கொலை செய்து கொள்வது என்பது தண்டைக்குரிய ஒரு குற்றமாகும். இருப்பினும், சில நாடுகள் தற்கொலையை சட்டப்பூர்வமாக அனுமதிக்கிறது,
அதாவது மோசமான நோயால் பாதிக்கப்பட்டவர்கள் கடும் வலிக்கு மத்தியில் உயிர் வாழ்வதற்குப் பதிலாக, தற்கொலை செய்து கொள்ள சில நாடுகள் அனுமதிக்கிறது.
அரசு அனுமதி
அப்படி ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான சுவிட்சர்லாந்திலும் தற்கொலை செய்து கொள்வது சட்டப்பூர்வமாக அனுமதிக்கப்படுகிறது. இந்தச் சூழலில் சுவிட்சர்லாந்து அரசு சட்டப்பூர்வமான தற்கொலைக்குச் சவப்பெட்டி வடிவ காப்ஸ்யூல்களை பயன்படுத்த அனுமதி அளித்துள்ளது.
இதன் மூலம் ஒரு நிமிடத்திற்குள் ஒப்பீட்டளவில் வலியற்ற மற்றும் அமைதியான மரணத்தை ஒருவர் அடைய முடியும் எனக் கூறப்படுகிறது.
மரணம் எப்படி ஏற்படுகிறது
உடலில் உள்ள ஆக்சிஜன் அளவை குறைப்பதன் மூலம் உயிர் பிரியும். அதாவது இந்த காப்சியூல் வெறும் 30 நொடிகளில் உள்ளே இருப்பவர் உடலில் இருக்கும் ஆக்சிஜன் அளவை 21 சதவீதத்திலிருந்து 1 சதவீதமாகக் குறைக்கிறது.
அதன் பின்னர் உள்ளே இருப்பவர் சுயநினைவை இழந்து ஆழ்ந்த கோமாவுக்கு சென்றுவிடுவர். அடுத்த 5ஆவது நிமிடத்தில் உள்ளே இருப்பவரின் உயிர் பிரியும் என காப்சியூலை உற்பத்தி செய்த நிறுவனம் தெரிவித்துள்ளது.
யார் உருவாக்கியது
உடல் ஆக்சிஜனை குறைப்பதன் மூலம் ஹைபோக்ஸியா மற்றும் ஹைபோகாப்னியா ஏற்பட்டு மரணம் ஏற்படுகிறது.
இந்த காப்சியூலை உள்ள இருந்தும் கூட இயக்கலாம். லாக் இன் சிண்ட்ரோம் (locked-in syndrome), அதாவது கண் இமைகளைத் தவிர அனைத்து வகையான தசை செயல்பாடுகளும் பாதிக்கப்பட்டுள்ள நபர்கள் கூட கண் அசைவு மூலம் இந்த இயந்திரத்தை இயக்க முடியும்.
‘டாக்டர் டெத்’ என்றும் பெயரிடப்பட்டுள்ள இந்த இயந்திரத்தை எக்சிட் இன்டர்நேஷனல் என்ற நிறுவனம் தயாரிக்கிறது.
சுவிட்சர்லாந்து
இந்த காப்சியூல் முதலில் பயனாளர் இருக்கும் இடத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டு. இந்த காப்சியூல் மக்கக் கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளதால், உயிரிழந்ததும் இந்த காப்சியூலை அப்படியே சவப்பெட்டியாகவும் பயன்படுத்தலாம். அடுத்தாண்டு முதல் இந்த காப்சியூல் பயன்பாட்டிற்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சுவிட்சர்லாந்தில் கடந்த ஆண்டில் மட்டும் சுமார் 1,300 பேர் கருணைக்கொலை செய்யப்பட்டுள்ளனர். இதுவரை 2 காப்சியூல்கள் மட்டுமே தயாரிக்கப்பட்டுள்ளன. மூன்றாவது காப்சியூல் தற்போது வடிவமைக்கப்பட்டு வருகிறது.
அதேநேரம் இந்த இயந்திரத்தைப் பலரும் கடுமையாகச் சாடியுள்ளனர், இது கேஸ் சாம்பர் (gas chamber) போலவே உள்ளதாக விமர்சித்துள்ளனர், 2ஆம் உலகப் போரின் சமயத்தில் இந்த கேஸ் சாம்பர் முறையைப் பயன்படுத்தித் தான் நாஜி படைகள் யூதர்களைக் கொன்று குவித்தது குறிப்பிடத்தக்கது.