நவகமுவ – ரணால பிரதேசத்தில் மனைவியின் கத்தி குத்துக்கு இலக்காகி கணவன் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
நேற்று செவ்வாய்க்கிழமை இரவு மதுபோதையில் வீட்டுக்கு வந்த கணவன் மனைவியுடன் ஏற்பட்ட முரண்பாட்டின்போது தேங்காயொன்றினால் அவரின் தலையில் பலமாக தாக்கியுள்ளார்.
இதனால் கோபமடைந்த மனைவி கையிலிருந்த கத்தியால் கணவனின் கழுத்து பகுதியை தாக்கியுள்ளார்.
இதன்போது படுகாயமடைந்த இருவரும் அயலவர்களால் நவகமுவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் மேலதிக சிகிச்சைகளுக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
எனினும் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த கணவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இவ்வாறு உயிரிழந்தவர் 50 வயதுடைய மொரகெட்டி பிரதேசத்தைச் சேர்ந்தவராவார்.
இந்த தம்பதியினர் கடந்த இரு மாதங்களுக்கு முன்னர் வாடகைக்கு அப்பகுதியிலுள்ள வீடொன்றில் குடியேறியுள்ளனர்.
அவர்கள் தாம் கணவன் மனைவி என்று கூறியுள்ள போதிலும், இதுவரையில் சட்ட ரீதியாக திருமணம் செய்துகொள்ளவில்லை என்று பொலிஸாரின் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
நவகமுவ பொலிஸார் இது தொடர்பில் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக பொலிஸ் ஊடகப்பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.