அம்பாறை மாவட்டத்தின் மருதமுனை கடற்கரையில் உருக்குலைந்த நிலையில் சடலம் ஒன்று இன்று கரையொதுங்கியுள்ளது.
இன்று (08) காலை கரைவலை மீனவர்கள் மீன் பிடித்துக்கொண்டிருந்த போது மீனவர்களின் வலையில் சடலம் சிக்கியுள்ளது.
பின்னர் மீனவர்கள் சடலத்தை கரைக்கு கொண்டு வந்துள்ளனர்.
அடையாளம் காண முடியாத அளவு சடலம் உருக்குலைந்து காணப்பட்டதாக நியூஸ்ஃபெஸ்ட் செய்தியாளர் தெரிவித்தார்.
சடலம் தொடர்பான விசாரணைகளை பெரிய நீலாவணை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
வடக்கின் பல பகுதிகளில் கடந்த சில தினங்களாக சடலங்கள் ஒதுங்கும் சம்பவங்கள் பதிவாகிய நிலையிலேயே இன்று இந்த சம்பவம் பதிவாகியுள்ளது.
கடந்த இரண்டு வார காலத்தில் வடக்கின் பல பகுதிகளில் கடற்கரைகளில் 6 சடலங்கள் கரையொதுங்கியிருந்தன.
அண்மித்த சம்பவமாக யாழ். வடமராட்சி கிழக்கு சுண்டிக்குளம் கடற்கரையில் உருக்குலைந்த நிலையில் சடலமொன்று கடந்த வியாழக்கிழமை (02) கரையொதுங்கியது.
அதேநாளில் யாழ். சக்கோட்டை பகுதியிலும் சடலமொன்று கரையொதுங்கியது.
யாழ் – வெற்றிலைக்கேணி கடற்கரையில் கடந்த முதலாம் திகதி சடலமொன்று கரையொதுங்கியது.
யாழ் – வடமராட்சி கிழக்கு மணற்காடு கடற்கரையிலும் கடந்த 26 ஆம் திகதி சடலமொன்று கரையொதுங்கியது.
இதேவேளை, வல்வெட்டித்துறை ஊரிக்காடு பகுதியில் கடந்த 26 ஆம் திகதி ஆணொருவரின் சடலம் கரையொதுங்கியதுடன், யாழ். நெடுந்தீவு கடற்கரையில் ஆணொருவரின் சடலம் கடந்த 27 ஆம் திகதி கரையெதுங்கியது.
சடலங்கள் இதுவரை அடையாளம் காணப்படவில்லையெனவும், சிலவேளை இவர்கள் இந்திய மீனவர்களாக இருக்கலாம் என சந்தேகிப்பதாகவும் வட மாகாண பிரதி பொலிஸ்மா அதிபர் டி.ஜே பலிஹக்கார தெரிவித்திருந்தார்.
சடலங்களை இதுவரை எவரும் அடையாளம் காணவில்லை எனவும் இலங்கையில் உள்ள அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கும் இது குறித்து அறிவித்துள்ளதாகவும் பருத்தித்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கூறினார்.
இது தொடர்பில் இந்திய தூதரகத்திற்கும் அறிவித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.