பிரியந்த குமாரவைக் காப்பாற்ற முயன்ற மலிக் அட்னான் தொழிற்சாலையில் உருது மொழியில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருந்ததால் பிரியந்தவிற்கு அதில் என்ன எழுதப்பட்டிருந்தது என்பது தெரியவில்லை எனக் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த வெள்ளிக்கிழமை இடம்பெற்ற சம்பவங்களால் நான் அதிர்ச்சியடைந்துள்ளேன்,பிரியந்த இவ்வளவு இரக்கமற்ற முறையில் கொல்லப்பட்டதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.
தனக்கு வழங்கப்பட்ட விருதினை பிரியந்தவின் பிள்ளைகளுக்கும் இலங்கை மக்களுக்கும் அர்ப்பணித்துள்ள அவர் இந்தச் சம்பவத்தினால் இரு நாடுகளிற்கும் இடையிலான உறவுகள் பாதிக்கப்படுவதற்கு அனுமதிக்க வேண்டாம் என இரு நாடுகளின் மக்களையும் கேட்டுக்கொண்டுள்ளார்.
அன்று இடம்பெற்ற சம்பவம் குறித்து தெரிவித்துள்ள அவர் பிரியந்த அலுவலகத்திற்கு வந்தவுடன் சுவரொட்டிகளை அகற்றினார்.
தொழிற்சாலையில் சுவரொட்டிகளை ஒட்டக்கூடாது என அவர் எப்போதும் தெரிவித்து வந்தார் எனவும் அட்னான் தெரிவித்துள்ளார்.
சுவரொட்டிகளை அகற்றிய பின்னர் அவர் தனது அலுவலகத்திற்குச் சென்றார். சில தொழிலாளர்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவிக்க ஆரம்பித்தனர்.
அவர்கள் அந்த சுவரொட்டிகள் மத ரீதியில் முக்கியத்துவம் வாய்ந்தவை எனக் குறிப்பிட்டனர் எனவும் தெரிவித்துள்ளார்.
சில தொழிலாளர்கள் தொழிற்சாலையின் வெளியே ஒன்றுகூடத் தொடங்கினார்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
குழப்ப நிலையை அவதானித்த அட்னான் வெளியே சென்று நிலைமையைச் சரி செய்ய முயன்றுள்ளார்,
பிரியந்த தவறிழைத்தால் அதனை அதிகாரிகள் பார்த்துக்கொள்வார்கள். எவரும் சட்டத்தை கையில் எடுக்கக்கூடாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஆனால் அந்தத் தருணத்தில் மேலும் பலர் அங்கு வரத் தொடங்கியுள்ளனர்.அட்னான் அவர்கள் பிரியந்தவின் அலுவலகத்திற்குள் செல்வதை தடுத்து நிறுத்த முயன்றதுடன் பிரியந்தவை கூரையில் தஞ்சம் புகுமாறு கேட்டுள்ளார்.
எனினும் தானும் தாக்கப்பட்டதாலும் பெருமளவானவர்கள் அங்கு காணப்பட்டதாலும் தன்னால் எதுவும் செய்ய முடியவில்லை எனக் குறிப்பிட்டுள்ள அவர் கூரைக்குச் சென்றவர்கள் பிரியந்தவை தாக்கினார்கள் எனவும் குறிப்பிட்டுள்ளார்.