கொழும்பு சன நடமாட்டம் அதிகமான பகுதிகளில் ஒன்றாக கருதப்படும் பொரளையில் தங்க நகை கடையொன்று இன்று மாலை ஆயுதம் தரித்த அடையாளம் தெரியாத கொள்ளையர்களால் கொள்ளையிடப்பட்டுள்ளது.
பொரளை சந்தியை அண்மித்த, பொரளை – மருதானை வீதியில் அமைந்துள்ள தங்க நகைக் கடையே இவ்வாறு இன்று பிற்பகல் 2.50 மணியளவில் கொள்ளையிடப்பட்டுள்ளது.
முகத்தை முழுமையாக மறைக்கும் தலைக் கவசம் அணிந்து மோட்டார் சைக்கிளில் வந்த இருவர், ஆகாயத்தை நோக்கி துப்பாக்கிப் பிரயோகம் செய்து, நகைக் கடையில் இருந்தோரை அச்சுறுத்தி இக்கொள்ளையில் ஈடுபட்டுள்ளதாக பொலிஸார் கூறினர்.
கொள்ளையிடப்பட்ட தங்க நகைகளின் பெறுமதி, உடனடியாக மதிப்பிடப்படாத நிலையில், பொரளை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியின் கீழான குழுவும், கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவின் சிறப்புக் குழுவொன்றும் விஷேட விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.
கொள்ளையர்கள் கொள்ளையை தொடர்ந்து, நகைகளுடன் தப்பிச் செல்லும் சி.சி.ரி.வி. காணொளிகளையும் சேகரித்துள்ள பொலிஸார், நகைக் கடையில் இருந்த தடயங்களையும் சேகரித்துள்ளனர்.
இந் நிலையில் கொள்ளையர்களை அடையாளம் காணவும் , அவர்களைக் கைது செய்யவும் தீவிர விசாரணைகள் முடக்கிவிடப்பட்டுள்ளன.