யாழ்ப்பாணம் – அராலி வீதியில் வசந்தபுரத்தைச் சேர்ந்த கண்ணன் பத்மலோஜினி (வயது-38) என்ற 3 பிள்ளைகளின் தாயார் கோவிட்-19 நோய்த் தொற்றுக்குள்ளாகி உயிரிழந்துள்ளார்.
இவருக்கு 6 நாட்களாக காய்ச்சல் இருந்துள்ளது. அவர் தனியார் மருத்துவமனையில் மருத்துவ ஆலோசனையுடன் மாத்திரைகளைப் பெற்றுள்ளார்.
இந்த நிலையில் மூச்சுத் திணறலுக்குள்ளான நிலையில் யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் நேற்று முன்தினம் சேர்க்கப்பட்டார்.
எனினும் இவர் சிகிச்சை பயனின்றி உயிரிழந்தார் என்று நேற்று மருத்துவ அறிக்கையிடப்பட்டுள்ளது. அவரது சடலத்தில் இருந்து பெறப்பட்ட மாதிரிகள் பி.சி.ஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன.
அதில் அவருக்கு கோவிட்-19 நோய்த்தொற்றுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
உயிரிழந்த குடும்பப் பெண் கோவிட்-19 தடுப்பூசியின் முழுமையான அளவைப் பெற்றுக்கொள்ளவில்லை என்று தெரிவிக்கப்பட்டது.
சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனை திடீர் இறப்பு விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் விசாரணைகளை முன்னெடுத்தார்.
சடலம் உடற்கூற்று பரிசோதனைக்காக யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. அதன்பின்னர் சுகாதார விதிமுறைகளின் அடிப்படையில் தகனம் செய்யப்படவுள்ளது.