தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி அருகே உள்ள ஊமத்தநாடு ஊராட்சி ஆதிதிராவிடர் தெருவைச் சேர்ந்தவர் வெள்ளைச்சாமி (46). இவரது மனைவி நாகூர் மாலா (40).
இவர்களது மகள் துளசி (18). 2018ஆம் ஆண்டு பேராவூரணி தனியார் பள்ளியில் (455/500) மதிப்பெண் பெற்று பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றுள்ளார்.
2020 ஆம் ஆண்டு பட்டுக்கோட்டை தனியார் பள்ளியில் (421/600) மதிப்பெண் பெற்று 12ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றுள்ளார்.
அதனைத் தொடர்ந்து 2020ஆம் ஆண்டு நீட் தேர்வு எழுதி வெற்றிபெற்றும் அரசு மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைக்கவில்லை. இந்நிலையில் 2021 ஆம் ஆண்டு திருச்சி அருகே துறையூரில் உள்ள தனியார் பள்ளியில் நீட் பயிற்சி மையத்தில் சேர்ந்து பயின்றுள்ளார்.
தற்போது நடைபெற்று முடிந்த நீட் தேர்வில் அவர் 306 மதிப்பெண் பெற்றும் அரசு மருத்துவக்கல்லூரியில் இடம் கிடைக்கவில்லை. இதனால் துளசி மன உளைச்சலில் இருந்துள்ளார்.
இந்நிலையில் பொறியியல் அல்லது அக்ரி படிப்பில் சேருவதற்கு முயற்சி செய்துள்ளார். ஆனால் தனியார் நீட் பயிற்சி மையத்தில் பணம் கட்டிய நிலையில், மேலும் பாக்கிப் பணம் தரவேண்டும் எனக் கூறி சான்றிதழ்களை தர காலதாமதப்படுத்தி பொறியியல் கவுன்சிலிங் முடிந்தபிறகு கொடுத்ததாக கூறப்படுகிறது. இதனால் வேறு படிப்பிலும் சேர முடியவில்லை என துளசி மன உளைச்சலில் இருந்துள்ளார்.
இந்நிலையில் வெள்ளைச்சாமி, நாகூர் மாலா இருவரும் சனிக்கிழமை வயலுக்கு வேலைக்கு சென்று விட்டனர்.
பெற்றோர் வெளியில் சென்ற நேரத்தில், வீட்டில் யாரும் இல்லாத போது ஓட்டு வீட்டின் கூரையில் துளசி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது.
மாலை வீட்டிற்கு திரும்பிய பெற்றோர், துளசி தூக்கிட்டு தொங்கியதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் அக்கம்பக்கத்தினர் உதவியுடன் துளசியின் உடலை மீட்டனர்.
பேராவூரணி வட்டாட்சியர், போலீசார் விசாரணை நடத்தி வருவதாக அச்செய்தியில் கூறப்பட்டுள்ளது.