திருமணம் செய்து கொள்ள மறுத்ததால் 25 வயது இளம்பெண்ணை 36 வயதான, ஏற்கனவே மூன்று திருமனமான டாக்சி ஓட்டுநர் கொலை செய்ததாக செய்தி வெளியாகியுள்ளது.
மேற்குவங்காளத்தை சேர்ந்தவர் ஷபிகுல் இஸ்லாம். டாக்சி ஓட்டுநரான இவருக்கு ஏற்கனவே மூன்று திருமணங்கள் நடைபெற்றுள்ளன. ஷபிகுல் இஸ்லாம் தனது மூன்றாவது மனைவியுடன் ஹரியானா மாநிலம் குருகிராமில் வசித்து வந்துள்ளார்.
இதற்கிடையில், ஷபிகுலுக்கு குருகிராமில் அவர் வசித்து வந்த பகுதியை சேர்ந்த 25 வயதான நர்ஹிஸ் ஹடூன் என்ற இளம்பெண்ணுடன் ஏற்பட்ட நட்பு, நாளடவைவில் காதலாக மாறியுள்ளது.
கடந்த செப்டம்பர் மாதம் 20ஆம் தேதி பால் வாங்க சென்ற நர்ஹிஸ் வீடு திரும்பவில்லை. இதனால், பதற்றமடைந்த நர்ஹிஸின் தந்தை தனது மகளை காணவில்லை என போலீசில் புகார் அளித்தார்.
இந்த புகாரைத் தொடர்ந்து போலீசார் தீவிர தேடுதல் வேட்டை நடத்திய நிலையில் செப்டம்பர் 23-ம் தேதி தெற்கு நகர் – 1 மாவட்டத்தில் நர்ஹிஸ் சடலமாக மீட்கப்பட்டார். இந்த சம்பவத்தை தொடர்ந்து விசாரணையை தீவிரப்படுத்திய போலீசார் சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்தனர்.
அதில், நர்ஹிஸ் கடைசியாக ஒரு டாக்சியில் ஏறிச்சென்றது தெரியவந்தது. அந்த டாக்சி எண் உள்ளிட்டவற்றை வைத்து போலீசார் மேற்கொண்ட விசாரணையில் அந்த டாக்சியை ஷபிகுல் இஸ்லாம் ஓட்டிச்சென்றது தெரியவந்தது.
அவரை போலீசார் தேடிய நிலையில் ஷபிகுல் இஸ்லாம் குருகிராமில் இருந்து தப்பி ஓடிவிட்டார். இதனால், தனிப்படை அமைக்கப்பட்டு ஷபிகுல்லை போலீசார் தீவிரமாக தேடி வந்தனர்.
மேற்குவங்க மாநிலம் புல்வாரி சவுக் பகுதியில் இந்தியா வங்கதேச சர்வதேச எல்லைப்பகுதியில் பதுங்கி இருந்த இஸ்லாம் ஷபிகுல்லை குருகிராம் போலீசார் நேற்று கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட ஷபிகுல்லிடம் நடத்தப்பட்ட விசாரணையில், ஷபிகுல் இஸ்லாமுக்கு ஏற்கனவே 3 முறை திருமணமானது தெரியவந்தது. மேலும், இளம்பெண்ணான நர்ஹிஸ் ஹடூனிடம் தன்னை திருமணம் செய்துகொள்ளும்படி ஷபிகுல் கேட்டதும், அதற்கு நர்ஹிஸ் மறுத்ததையடுத்து அவரை கொலை செய்ததுவிட்டு குருகிராமில் இருந்து மேற்கு வங்காளத்திற்கு வந்துவிட்டதாகவும் போலீசாரிடம் ஷபிகுல் இஸ்லாம் தெரிவித்தார்.
மேலும், மேற்குவங்காளத்தில் இருந்து சர்வதேச எல்லை வழியாக வங்கதேசத்திற்குள் செல்ல திட்டமிட்டிருந்ததாக போலீசாரிடம் அவர் தெரிவித்ததாக அச்செய்தியில் கூறப்பட்டுள்ளது.